இந்தியாவில் பிரம்மாண்டமும், பேரழகும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற சாந்த் பாவ்ரி படிக்கிணறு ராஜஸ்தான் மாநிலம், ஆபானேரி கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்த படிக்கிணறு சாந்த் மகாராஜாவால் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது போன்ற பாவ்ரிகள் அல்லது படிக்கிணறுகள் அந்த காலங்களில் மழை நீரை சேமித்து வைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சாந்த் பாவ்ரி படிக்கிணறு 100 அடி ஆழமும், 3500 குறுகலான படிகளும், 13 தளங்களும் கொண்டு வட்ட வடிவில் மிக பிரம்மாண்டமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த கிணறுக்கு மூன்று புறங்களும் படிகள் சூழ்ந்திருக்க, இதன் நான்காவது பக்கத்தில் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த காட்சிக் கூடங்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுகளால் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் கலை நிகழ்சிகள் நடந்தேறும் மேடைகளையும், ராஜா ராணிகளின் அறைகளையும் நீங்கள் இங்கே பார்க்கலாம்.
சாந்த் பாவ்ரி கிணறு தற்போது தொல்பொருள் துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கிணற்றை சுற்றிப் பார்க்க கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இதுதவிர இந்த படிக்கிணறு 'தி ஃபால்' மற்றும் 'தி டார்க் நைட் ரேய்சஸ்' போன்ற திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.