தற்போது மாநில சட்டப்பேரவையாக இயங்கும் உஜ்ஜயந்தா அரண்மனை அகர்தலா நகரத்தின் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை அடையாளமாகும். இந்தோ கிரேக்க பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை மஹாராஜா ராதாகிஷோர் மாணிக்யா என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.
இது 1899 – 1901ம் ஆண்டுகளில் மெசர்ஸ் மார்ட்டின் & கோ எனும் நிறுவனத்தின் சார்பாக சர் அலெக்ஸாண்டர் மார்ட்டின் என்பவரால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உஜ்ஜயந்தா அரண்மனை எனும் பெயர் நோபல் விருது பெற்ற இந்திய கவிஞரான ரவிந்திரநாத் தாகூரால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அரண்மனையில் அரியணை அறை, தர்பார் கூடம், வரவேற்பறை மற்றும் ஒரு நூலகம் ஆகியவற்றோடு சுற்றிலும் பல தோட்டப்பூங்காக்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
800 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த பூங்காவில் ஜகந்நாத் கோயில் மற்றும் உமாமஹேஷ்வர் கோயில் எனப்படும் இரண்டு கோயில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
உஜ்ஜயந்தா அரண்மனை மூன்று குமிழ் மாட அமைப்புகளை உள்ளடக்கியதாய் காணப்படுகிறது. இவற்றில் பெரியதான மாடம் 26மீ உயரத்துடன் காட்சியளிக்கிறது.
மாளிகையின் உட்புறத்தை நுணுக்கமான மரக்குடைவு அலங்காரங்கள் மற்றும் பிரம்மாண்டமான கதவுகள் அழகுபடுத்துகின்றன. அக்காலத்தில் இந்த அரண்மனையை கட்டுவதற்கு 10 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.