‘64 தூண்களை கொண்டது’ என்ற பொருளைத்தரும் இந்த ‘சௌஸத் கம்பா’ நிஜாமுதீன் பகுதியில் உள்ளது. சூஃபி முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கல்லறைகளை உள்ளடக்கிய இந்த பண்பாட்டு வளாகம் 1623-24ம் ஆண்டுகளில் ஜஹாங்கிர் மன்னர் ஆட்சியின்போது கட்டப்பட்டிருக்கிறது.
அக்பரின் வளர்ப்புத்தாதியான ஜில்லி ஆங்கா மற்றும் அட்டகா கான் ஆகயோரது மகனான மிர்ஸா அஜிஸ் கொக்கா என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.
அஜிஸ் கொக்கா ஜஹாங்கீர் ஆட்சியின்போது குஜராத் பகுதியின் அரசப்பிரதிநிதியாகவும் அவரது தந்தைஅட்டகா கான் அக்பரது அவையில் பிரதானியாகவும் இருந்திருக்கின்றனர். அஜிஸ் கொக்கா தனக்கான ஒரு கல்லறை மாளிகையை எழுப்ப விரும்பி இந்த சௌஸத் கம்பாவை நிர்மாணித்துள்ளார்.
முதலில் ஒரு மண்டபமாக உருவாக்கப்பட்டு பின்னர் இது கல்லறை மாளிகையாக மாற்றப்பட்டிருக்கிறது. சதுர வடிவிலான இந்த கட்டிடம் முழுக்க முழுக்க வெண்பளிங்குகற்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பெயருக்கேற்ப 64 தூண்களையும் 25 நடைபாதைகளையும் இது கொண்டிருக்கிறது. சமதளக்கூரையை கொண்டிருக்கும் இந்த கல்லறை சின்னம் தற்போது ஒரு பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சந்தடி நிரம்பிய நிஜாமுதீன் பஸ்தி எனும் இடத்தில் இது அமைந்துள்ளது. இது ஹஸ்ரத் நிஜாமுதீன் ஔலியா வசித்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.