அராம் பாக் அல்லது பாக் இ குல் அப்ஷான் என்ற பெயர்களிலும் அழைக்கப்படும் இந்த ராம் பாக் முதல் முகலாய பேரரசரான பாபரால் 1528ம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சினி கா ரௌஜா எனும் கல்லறை மாளிகையிலிருந்து 500 மீட்டர் தொலைவிலும், இதிமத் உத் தௌலா’வுடைய கல்லறை மாளிகையிலிருந்து 3 கி.மீ தூரத்திலும், தாஜ் மஹாலிலிருந்து 5 கி.மீ தூரத்திலும் இது உள்ளது.
இந்த பிரம்மாண்டமான பூங்கா நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு அழகிய நடைபாதைகள் மற்றும் நீர்வழிக்கால்வாய்களோடு அமைக்கப்பட்டிருக்கிறது. பாரசீக ‘சார்பாக்’ தோட்டபூங்கா பாணியில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. சார்பாக் என்பது ‘பூமியிலுள்ள சொர்க்க பூங்கா’ எனும் பொருளைக்குறிப்பதாகும்.
இந்த பூங்காவின் நீர்வழிக்கால்வாய்களுக்கான நீர் யமுனை நதியிலிருந்து பெறப்பட்டு மூன்று தளங்களை கடந்து அருவி போல் வழிந்து இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
யமுனை நதியை நோக்கியவாறு இரண்டு காட்சி மாடங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு கிழே ‘தக்காணா’ எனப்படும் நிலவறைகளும் வெயில் காலத்தில் ராஜ குடும்பத்தினர் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
பலவகையான பூச்செடிகளும் தாவரங்களும் வளர்க்கப்பட்டு குறுக்கு நெடுக்காக செல்லும் நீர்ப்பாதைகள் மற்றும் ஆங்காங்கு நீரூற்றுகளோடு ரம்மியமாக இந்த பூங்கா காட்சியளிக்கிறது. ஜஹாங்கீரின் மனைவியான நூர் ஜஹான் இந்த பூங்காவை புதுப்பித்ததாக தெரிய வருகிறது.