ஜமா மஸ்ஜித் எனும் இந்த மசூதி மன்னர்களின் தனிப்பட்ட உபயோகத்திற்காக கட்டப்பட்டிருக்கிறது. 1423ம் ஆண்டு சுல்தான் முதலாம் அஹமத் ஷா மன்னரின் ஆட்சிக்காலத்தில் இது கட்டப்பட்டு அவராலேயே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள் மணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ள இந்த மசூதியின் உள்முற்றம் சலவைக்கற்களால் அமைக்கப்பட்டிருக்கிறது.
தூண்கள் கொண்ட நடைபாதைகளால் இந்த மசூதி சூழப்பட்டிருக்கிறது. இந்த தூண்களில் அரபி வாசகப்பொறிப்புகள் காணப்படுகின்றன. மசூதியின் நுழைவாயிற்பகுதியிலுள்ள இரண்டு மினாரெட் கோபுரங்கள் 1819ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தில் சேதமடைந்துவிட்டன.
மசூதியின் பிரார்த்தனைக்கூடத்தில் 260 தூண்களால் தாங்கப்பட்டுள்ள 15 குமிழ்மாடக்கூரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், இந்த மசூதியின் சுவர்களில் ஜைன மற்றும் ஹிந்து சித்திரப்பொறிப்புகளும் காணப்படுகின்றன. மசூதியின் மத்தியில் உள்ள குமிழ்மாட அமைப்பு ஜைன கோயில்களில் காணப்படுவதை போன்று தாமரை மலர் வடிவத்தில் காட்சியளிக்கிறது.
இங்குள்ள சில தூண்களில் மணி போன்ற சித்திரமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி மசூதியின் உள்ளே காணப்படும் ஒரு ஜன்னலில் ‘ஓம்’ சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கிறது.
எல்லா மதங்கள் மற்றும் பிரிவுகளை சேர்ந்தவர்களும் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் தொழுகையின்போது அமைதிகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பார்வையாளர்கள் தலையில் துணி கட்டிக்கொண்டு மசூதியின் உள்ளே செல்ல வேண்டும். பெண்களுக்கு மசூதியின் உள்கூடத்தில் அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஹமது ஷா, அவரது மகன் மற்றும் அவரது பேரன் ஆகியோரது கல்லறைகள் இந்த மசூதியின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளன. ராணி மற்றும் இதர மனைவிகள் புதைக்கப்பட்டுள்ள இடமும் அருகிலேயே காணப்படுகின்றன.