10ம் நூற்றாண்டில் குஜராத் பிரதேசத்தின் இதார் பகுதியை ஆண்ட பரிஹார் வம்ச மன்னர்களின் நகரமே போலோ வரலாற்றுஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் விஜய்நகர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
இப்பகுதியின் முதல் மனிதக்குடியிருப்பு இன்றும் இப்பிரதேசத்தில் வற்றாமல் ஓடும் ஹர்ணவ் ஆற்றங்கரையில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்பகுதியை ஆண்ட பரிஹார் ராஜ வம்சம் 15ம் நூற்றாண்டில் ரத்தோட் ராஜபுதன வம்சத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டது.
போலோ எனும் சொல்லுக்கு மார்வாரி மொழியில் ‘நுழைவாயில்’ என்பது பொருளாகும். அதாவது ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் இடையில் இந்த போலோ ஸ்தலம் ஒரு நுழைவாயில் போன்று திகழ்ந்ததால் இப்பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
போலோ நகரமானது கிழக்கில் கலாலியோ சிகரம் மேற்கில் மம்ரேச்சி சிகரம் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டிருந்ததால் சூரிய வெளிச்சம் அதிகம் கிடைக்காத வகையில் இருந்திருக்கிறது.
எனவே இந்நகரம் நாளடைவில் புறக்கணிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. ஷிவ் மந்திர், சூர்ய மந்திர், லக்கேனா கோயில், ஜெயின் தேராசர் போன்றவை இந்த போலோ வரலாற்று ஸ்தலத்தில் சிதிலமடைந்து காட்சியளிக்கின்றன.
போலோ வரலாற்று ஸ்தலத்தை ஒட்டியே அமைந்துள்ள விஜய்நகர் வனப்பகுதி இடைநிலை இலையுதிர் காடுகளை கொண்டுள்ளது. இங்கு ஆதிவாசிகள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
இந்த காட்டில் பலவகையான மருந்துத்தாவரங்கள் கிடைப்பதோடு பல வகையான பறவைகள், ஊர்வன மற்றும் பாலூட்டி விலங்கினங்களும் வசிக்கின்றன.