சர்கேஜ் ரோஸா எனப்படும் இந்த முக்கியமான ரோஸா வளாகத்தில் மசூதிகள், கல்லறைகள் மற்றும் அரண்மனைகள் போன்றவை அடங்கியுள்ளன.
அஹமதாபாத் நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் சர்கேஜ் எனும் இடத்தில் உள்ள இந்த வளாகம் சுல்தான் முகமத் ஷா’வால் துவக்கப்பட்டு பின்னர் குதுபுதீன் அஹமத் ஷா’வால் தொடரப்பட்டு இறுதியாக மஹ்மூத் பெக்டா மன்னரால் எல்லா முக்கிய கலையம்சங்களோடும் முடிக்கப்பட்டிருக்கிறது.
ஷேய்க் அஹமத் கட்டு கஞ்ச் பக்ஷ் எனும் சூஃபி ஞானியின் மரணத்திற்குப்பின் அவருக்கு ஒரு கல்லறை மாளிகை மற்றும் மசூதியை கட்ட சுல்தான் முகமத் ஷா முடிவு செய்தார்.
பின்னர் மஹ்மூத் பெக்டா இந்த நோக்கத்தை சற்றே விரிவுபடுத்தி அதே வளாகத்தில் ஒரு கோடைக்கால அரண்மனை, மத்திய குளப்பகுதியில் சில புதுப்பிப்புகள், மாட அமைப்புகள், மசூதி, தனக்கு மற்றும் தனது குடும்பத்தாருக்கும் கல்லறைகள் போன்றவற்றை இடம் பெற செய்தார்.
இந்த ஒட்டுமொத்த வளாகத்தின் வடிவமைப்பானது இஸ்லாமிய, ஹிந்து மற்றும் ஜைன அம்சங்களின் கலவையாக காட்சியளிக்கிறது. குமிழ் கோபுரங்கள், தூண்கள் மற்றும் விதானக்கூரை வளைவுகள் போன்றவை இஸ்லாமிய பாணியிலும், அலங்கார நுணுக்கம் சித்திரச்சித்தரிப்புகள் போன்றவை ஹிந்து பாணியிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இங்குள்ள பெரும்பாலான அமைப்புகளில் வழக்கமான அலங்கார வாசல் விதானக்கூரை அல்லாமல் கற்களை கோர்த்து இணைத்து அமைக்கப்பட்ட கட்டுமானமுறை காணப்படுகிறது.