அதாய் தின் கா ஜோப்ரா என்று அழைக்கப்படும் இந்த பிரசித்தமான மசூதி ஒரு சுவாரசியமான கதையை பின்னணியில் கொண்டுள்ளது. அதாவது, இது இரண்டரை நாட்களிலேயே கட்டி முடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆதியில் ஒரு சம்ஸ்கிருத கல்லூரியாக செயல்பட்ட இந்த கட்டிடத்தை முஹமத் கோரி 1198ம் ஆண்டு ஒரு மசூதியாக மாற்றியுள்ளார். மசூதியைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள 7 விதான வளைவுகளுடன் கூடிய சுவரில் குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஹீரட்டைச்சேர்ந்த அபு பக்கர் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மசூதி ஆரம்ப கால இந்தோ இஸ்லாமிய கட்டிடக்கலை பாணிக்கு உதாரணமாக திகழ்கிறது. பின்னாளில் 1230ம் ஆண்டு சுல்தான் அல்டமிஷ் என்பவரால் ஜாலி எனப்படும் சல்லடை சாளர அமைப்பு இந்த மசூதியின் அலங்கார வளைவுக்கு கீழே உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்குப்பகுதியில் அமைந்துள்ள அலங்கார வளைவு இந்த மசூதியின் பிரதான வாசலாக உள்ளது. மசூதியின் முகப்பு மஞ்சள் மணற்பாறைக்கற்களால் ஆன அலங்கார வளைவுகளைக்கொண்டுள்ளது.
இவற்றில் பெரியதாக காணப்படும் அலங்கார வளைவுக்கு அருகிலேயே ஆறு சிறிய அலங்கார வளைவுகள் காணப்படுகின்றன. இவை வெளிச்சத்தை ஊடுறுவ வைக்கும் சிறு செவ்வக வடிவிலான துளை அடுக்குகளைக் கொண்டுள்ளன. இது போன்ற நுணுக்கமான கலையம்சங்கள் அரேபிய மசூதிகளில் அதிகமாக காணப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசூதியின் மையக்கூடம் அதிக எண்ணிக்கையில் அமைந்த தூண்களால் தாங்கப்பட்டுள்ளது. உயரத்தை அதிகப்படுத்துவதற்காக தூண்கள் ஒன்றின்மிது ஒன்று அடுக்கி நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் தூண்கள் அடிப்பகுதியில் பருமனாகவும் மேலே செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.