பத்திரமண்ணல் எனும் இந்த அற்புதமான தீவுப்பகுதி ஒரு கனவுலகம் போன்று காட்சியளிக்கிறது. சிறிய நிலப்பரப்பில் கண்கவரும் இயற்கை அழகுடன் வீற்றிருக்கும் இந்த தீவுப்பகுதிக்கு படகு மூலமாக மட்டுமே செல்ல முடியும். சந்தடி நிறைந்த மாநர வாழ்க்கையில் நொந்து அலுப்புற்றிருப்பீர்களேயானால், ஒரு முறை இங்கு வந்து இந்த ஸ்தலத்தின் அமைதியையும் இயற்கையின் அரவணைப்பையும் உணர்ந்து பாருங்கள்.
வாழ்க்கையை திரும்ப நேசிக்கத் துவங்குவீர்கள். இங்கு காணக்கிடைக்கும் சூரிய உதய – அஸ்தமன காட்சிகள் உங்கள் நெஞ்சைவிட்டு பின்னர் ஒருபோதும் மறையாது. உப்பங்கழி படகுச்சுற்றுலாவில் இந்த தீவு ஸ்தலத்துக்கு விஜயம் செய்வதும் உள்ளடங்குகிறது. சுற்றிலுமுள்ள வேம்பநாட் ஏரித்தேக்கமும், பசுமையான தாவரப்பிரதேசமும் இந்த தீவுப்பகுதியை இயற்கை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பறவைகளுக்கும் மிகப்பிடித்தமான ஸ்தலமாக மாற்றியுள்ளது.
நூற்றுக்கணக்கான புலம்பெயர் பறவைகளும், இருப்பிட பறவைகளும் இங்கு வசிப்பதால் காலை முதல் மாலை வரை விதவிதமான பறவையினங்களின் கீச்சொலிகளையும், கானங்களையும் கேட்டு பிரமிக்கலாம்.
இயற்கையின் அருகாமையும் பட்சிகளின் கீதமும் உங்களையே மறக்கச்செய்யும் என்பதை இங்கு விஜயம் செய்து அனுபவித்துப்பாருங்கள். சாகசவிரும்பிகள் பைனாகுலர் சகிதம் தீவிர பறவை வேடிக்கையிலும் ஈடுபடலாம். இந்த அற்புதத்தீவு ‘ஆலெப்பி நகரத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது. படகு மூலம் அரை மணி நேரத்தில் இங்கு வந்து சேரலாம்.