ஆலுவா நகரம் சிவராத்திரியின் போது அதன் சிவன் கோயிலில் 6 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி திருவிழாக்காக மிகவும் புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இந்த திருவிழாவை காண கேரளாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலுவா நகரத்தை நோக்கி படையெடுத்து வருவது போல் வருவார்கள்.
ஒருமுறை தேவர்களும், அசுரர்களும் அழியா அமுதத்தை பெறவேண்டி ஆதிசேஷன் என்ற ராட்சஸ பாம்பினைக் கொண்டு பாற்கடலை மத்தால் கடைந்த போது, ஆதிசேஷனின் நஞ்சு அமுதத்தோடு கலந்துவிட்டது.
அப்போது மனித இனத்தை காப்பாற்றுவதற்காக அந்த நஞ்சை சிவபெருமான் குடித்துவிட்டார். எனவே சிவபெருமானின் கருணையை போற்றும் விதமாக மகாசிவராத்திரி திருவிழாவின் முதல் நாள் அன்று பக்தர்கள் அனைவரும் இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் திருவிழாவின் இரண்டாம் நாள் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக வாவுபலி எனும் திருவிழா ஆலுவா நகரில் கொண்டாடப்படுகிறது. அப்போது மொத்த நகரமே ஒன்றாக கூடி திருவிழா கொண்டாட்டத்தில் ஈடுபடுவதால் ஆலுவா நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
மேலும் திருவிழாவின் 3 மற்றும் 4-ஆம் நாட்களில் 'திக்விஜயம்' என்ற பெயரில் பேரும் ஊர்வலம் ஒன்று நடைபெறும். அதோடு ஐந்தாம் நாள் சில பல மத சடங்குகள் திருவிழாவின் ஒரு அங்கமாக நடந்தேறும். இறுதியாக ஆறாம் நாள் ஆராட்டு அல்லது தபோஸ்தவத்துடன் மஹாசிவராத்திரி திருவிழா வெகு உற்சாகமாக நிறைவுபெறும்.
ஆலுவா நகரின் சிவன் கோயில் திருவிழாக்களுக்கு மட்டுமில்லாமல் அதன் கட்டிடக்கலைக்காகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்தக் கோயிலை முதல் முறையாக பார்க்கும் போது கட்டி முடிக்காதது போன்ற மாயத்தோற்றம் உருவாகும் பாணியில் வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ள பாங்கு மிகவும் அற்புதமானது. இதுதவிர இந்தக் கோயிலை அடுத்து பெரியார் நதி பாய்ந்து கொண்டிருப்பதால் கோயிலின் அழகு ரெட்டிப்படைந்து காட்சியளிக்கிறது.