ஏம்பி பள்ளத்தாக்கு எனும் இந்த உன்னத படைப்பு முழுக்க முழுக்க சஹாரா குழுமத்தின் மூளையால் உருவானது. எப்போது இப்படி ஒரு திட்டம் முன்மொழியப்பட்டதோ, அப்போதிருந்து எண்ணற்ற மாறுபட்ட கருத்துக்களும், திட்டத்தின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டே வந்தன. இந்த திட்டத்துக்காக இவ்வளவு முதலீடு செய்ய வேண்டுமா என்று கூட சிலர் கேள்வி கேட்டனர். எனினும் இவ்வளவு தடைகளையும் தாண்டி இன்று ஏம்பி பள்ளத்தாக்கு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
ஏம்பி பள்ளத்தாக்கு என்பது 10,000 ஏக்ராவில் பரந்து விரிந்து கிடக்கும் உல்லாச நகரமாகும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமான உட்புற மற்றும் வெளிப்புற கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக களிக்கலாம். அதோடு பயணிகளின் வசதிக்காக இங்கு ஆடம்பரமான தங்கும் விடுதிகளும் இருக்கின்றன.
மேலும் இந்தியாவில் உள்ள உல்லாச நகரங்களில், பிரத்யேகமாக பெரும் பணக்காரர்களுக்காகவே பல கோடிகள் செலவு செய்து முதல் முதலாக சொகுசு விடுதிகள் இங்கேதான் கட்டப்பட்டன.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் தனி விமானங்களில் வந்து உல்லாச நகரத்தில் இறங்குவதற்கு வசதியாக 1.5 கிலோமீட்டர் நீளத்தில் விமான ஓடுதளமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த உல்லாச நகரத்தின் மற்றுமொரு சிறப்பு, பிரசித்தி பெற்ற மலைவாசஸ்தலமான லோனாவலா இங்கிருந்து 30 மணி நேர பயண தூரத்தில் அமைந்திருப்பது ஆகும்.
வயது ஒரு விஷயம் அல்ல!
சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டிருந்த ஏம்பி பள்ளத்தாக்கு, சமீபத்தில் மேம்படுத்தப்பட்டதால் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. இங்குள்ள ஏழு நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் மிகப்பெரிய கோல்ஃப் மைதானமும், குழந்தைகளுக்கான பிரத்தியேக விளையாட்டு அம்சங்களும், நீர் பூங்காவும் எல்லா தரப்பு மக்களும் வயது வித்தியாசமின்றி பொழுதை கழிக்க ஏற்ற இடமாக இருப்பதுடன், இங்கு ஏற்படும் அனுபவம் பயணிகளின் மனதை விட்டு என்றும் அகலா சித்திரமாக நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. மேலும் இங்கு டைட்டானிக் கப்பலை போன்ற இரவு விடுதி ஒன்றும், டிஸ்கோதேக் ஒன்றும் செயல்பட்டு வருகின்றன.
மெருகேற்றப்பட்ட இயற்கையழகு
இயற்கையும், மனித படைப்பின் அற்புதமும் இரண்டறக் கலந்து காட்சியளிக்கும் பேரழகில்தான் ஏம்பி பள்ளத்தாக்கின் சாரமும், சிறப்பும் அடங்கி இருக்கிறது. இந்நகரத்தில் சில காணி நிலங்களையும், இயற்கை மற்றும் செயற்கை அருவிகளையும் பயணிகள் காணலாம்.
மேலும், உலகத்தில் நீங்கள் எங்கு தேடினாலும் கடல் மட்டத்திலிருந்து 2300 அடி உயரத்தில் 25 கிலோமீட்டர் நீள நீர் நிலையை காண முடியாது. இதுவே இந்த இடத்தின் தனிச் சிறப்பு. இந்த நீர் நிலையின் அழகிய கரை பெரியவர்களும், குழந்தைகளும் கோடை காலங்களில் குதூகலமாக பொழுதை கழிக்க ஏற்ற இடமாக இருந்து வருகிறது. அதோடு அலைக்குளம் பயணிகளின் மற்றுமொரு பொழுதுபோக்கு அம்சம்.
முக்கியமாக இந்த ஏம்பி பள்ளத்தாக்கு மிகப்பெரியதாக இருப்பதால் நீங்கள் தொலைந்து போகக் கூட வாய்ப்பு இருக்கிறது. அதற்காக கவலை கொள்ள வேண்டாம், வரவேற்பறையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் போதும் சிறிய கோல்ஃப் வண்டி வந்து உங்களை கூட்டிச் சென்று விடும்.
உங்களின் சொந்த வீடு போல!
ஏம்பி பள்ளத்தாக்கில் முதலீட்டாளர்கள் தொடங்கி, வார இறுதி நாட்களை கழிக்க வரும் பயணிகள் வரை தங்குவதற்கு எண்ணற்ற தங்கும் வசதிகள் உள்ளன. இங்கு வெளிப்புறக் கூடாரங்கள் வாடகைக்கு இருக்கின்றன. அவைகளுக்கும் 24 மணி நேர ஊழியர் சேவை வசதிகள் அளிக்கப்படுகின்றன.
இதுபோக குறைவான வெளிப்புற கேளிக்கைகளில் ஈடுபட விரும்பும் விருந்தினர்களுக்கு தனி அறைகளிலிருந்து, இரண்டு அறைகளை கொண்ட அப்பார்ட்மெண்ட், வில்லா என்று நிறைய தங்கும் வசதிகள் ஏம்பி பள்ளத்தாக்கில் வழங்கப்படுகின்றன.
ஏம்பி பள்ளத்தாக்கில் உள்ள தங்கும் விடுதிகளின் உட்புற மற்றும் சுற்றுப்புறத் தோற்றங்கள் இயற்கையும், மனித படைப்பும் கை கோர்க்கும் விதமாகவே திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த விடுதிகளில் உள்ள குளியலறைகளின் மேற்கூரை கண்ணாடியில் உருவாக்கப்பட்டிருப்பதால் நீங்கள் நீலவானத்தை பார்த்து ரசித்துக் கொண்டே நீராடலாம். அதோடு தூரத்தில் காணும் மலைகளின் காட்சியை ஜக்கூஸியில் நீராடியபடி ரசிக்கும் அனுபவம் மிகவும் வித்தியாசமானது.
ஏம்பி பள்ளத்தாக்கு தரம், சேவை, அலங்கார வடிவமைப்புகள் சார்ந்து எப்படி இந்தியா மற்றும் ஐரோப்பிய பாணிகள் இரண்டையும் சரிசமமாக கலந்த வகையில் செயல்பட்டு வருகிறது என்று இங்கு வரும் பயணிகள் அனைவரும் வியப்படைகின்றனர்.
இங்குள்ள விக்டோரிய பாணி தெருவிளக்குகள் ஆகட்டும், உருளைக்கற்கள் பதித்த நடைபாதைகளாக இருக்கட்டும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
வீர விளையாட்டுகளுக்கு தயாராகுங்கள்
ஏம்பி பள்ளத்தாக்கில் பயணிகள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு எண்ணற்ற விளையாட்டுகள் இருக்கின்றன. அதில் குதிரை சவாரியோ, கோல்ஃப் விளையாட்டோ எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
அதோடு இங்கு ஒவ்வொரு விளையாட்டுகளுக்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் முதல் முறையாக ஒரு விளையாட்டில் ஈடுபடுபராயினும், அவ்வப்போது விளையாடுபவராய் இருந்தாலும் சிறந்த முறையில் அதை விளையாடி மகிழலாம்.
ஏம்பி பள்ளத்தாக்கு மற்ற உல்லாச நகரங்களை ஒப்பிடும் போது பயணிகளுக்காக எண்ணற்ற விளையாட்டு மற்றும் கேளிக்கை அம்சங்களை மிகச் சிறந்த தரத்தில் கொண்டிருக்கிறது. எனினும் இதன் சேவைக்காக பெறப்படும் கட்டணம் நடுத்தர குடும்பங்களுக்கு கட்டுப்படியாகும் என்று சொல்ல முடியாது.
இருப்பினும் இங்கு அலை மோதும் பயணிகளின் கூட்டம் ஏம்பி பள்ளத்தாக்கின் தரத்தையும், வெற்றியையும் உலகுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக இருக்கிறது.
ஏம்பி பள்ளத்தாக்கில் ஒரு குழந்தையுடன் வரும் தம்பதியினருக்கு 15 முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும். ஆனால் ஏம்பி பள்ளத்தாக்கில் உங்களுக்கு கிடைக்கும் அனுபவம் வேறு எங்கும் கிடைப்பது அரிது.