துர்கியானா கோயில் எனும் இந்த பிரசித்தமான ஹிந்து கோயில் அம்ரித்ஸர் நகரில் துர்க்கைக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. லட்சுமி நாராயண் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த வழிபாட்டுத்தலம் 20ம் நூற்றாண்டில் ஹர்சாய் மால் கபூர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தங்கக்கோயிலை ஒத்திருக்கும் வடிவமைப்புடன் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக அறியப்படும் பண்டித மதன் மோகன் மாள்வியா இந்த கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார்.
இந்த கோயில் வளாகத்தில் பல ஹிந்து கடவுள்களின் சிலைகள் காணப்படுகின்றன. துர்க்கா, சீதா மற்றும் ஹனுமான போன்ற கடவுள்களின் சிலைகளை இங்கு தரிசிக்கலாம்.
துர்க்கையின் பல்வேறு அவதார தோற்றங்கள் கோயிலின் சுவர்ப்பகுதியில் அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கின்றன. ஹிந்து வேத நூல்களின் சாரங்களும் சுவரில் பொறிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன.
வெள்ளியால் ஆன வாசற்கதவுகளை கொண்டிருப்பதால் வெள்ளிக்கோயில் என்றும் இந்த கோயில் அழைக்கப்படுகிறது. அம்ரித்ஸர் நகரத்திற்கு வருகை தரும் ஹிந்து யாத்ரீகர்கள் தவறாமல் விஜயம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வழிபாட்டுத்தலமாக இந்த துர்கியானா கோயில் பிரசித்தி பெற்றுள்ளது.