அம்ரித்ஸர் நகரில் உள்ள முக்கியமான ஹிந்து கோயிலான துர்கியானா கோயிலின் வடமேற்கு மூலையில் இந்த ஹனுமான் மந்திர் அமைந்திருக்கிறது.
ஹனுமான் அல்லது ஆஞ்சநேயருக்கான இந்த கோயிலில் ராமபிரான் அஸ்வமேத யாகத்தை செய்வித்ததாக சொல்லப்படுகிறது. லுங்கூர்வாலா மேளா எனும் திருவிழாவின்போது இந்த கோயிலில் லங்கூர் நடன நிகழ்ச்சி பக்தர்களால் நிகழ்த்தப்படுகிறது.
பரா ஹனுமான் மந்திர் என்று பிரசித்தமாக அறியப்படும் இந்த ஹனுமான் கோயிலில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் ஹனுமான் சிலையை தரிசிக்கலாம்.
தினசரி இந்த கோயிலுக்கு விஜயம் செய்து வேண்டிக்கொண்டால் நினைத்தவை எல்லாம் நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆண் குழந்தைக்காக வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் இங்கு கோயில் வளாகத்தில் உள்ள ஒரு ஆலமரத்தில் நூல் ஒன்றை கட்டி விடுகின்றனர்.
பின்னர் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பட்சத்தில் நவராத்திரி நாளின்போது அந்த நூலை அவிழ்த்து விடுகின்றனர். அப்படி வேண்டுதல் மேற்கொண்ட பிறந்த ஆண் குழந்தைகளுக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்கு லங்கூர் உடை அணிவிக்கப்பட்டு கடைசி நாளில் இந்த ஆல மரத்தின் அருகே அந்த உடை கழற்றப்படும் ஒரு சடங்குமுறையும் வழக்கத்தில் உள்ளது.