சீமாந்திரா மாநிலம் விசாகப்பட்டணம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான அரக்கு பள்ளத்தாக்கு கிழக்கு தொடர்ச்சி மலைகள் சூழ கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பெருமைகளை சுமந்து கொண்டு கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளத்தாக்கு பகுதி இதுவரை வணிகமயமாக்கலின் பிடியில் சிக்காமல் இருப்பதனால் தன் கன்னிமை மாறா அழகு காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் எழில் கொஞ்சும் இதன் இயற்கையழகு தெலுங்கு சினிமாவின் கவனத்தை ஈர்த்ததோடு ஹாப்பி டேஸ், டார்லிங், கதா போன்ற திரைப்படங்கள் இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன.
அரக்கு பள்ளத்தாக்கு ஒரிசா மாநில எல்லைக்கு வெகு அருகில், விசாகபட்டணத்திலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளத்தாக்கு அனந்தகிரி மற்றும் சுங்கரிமெட்டா பாதுகாப்பு காடுகளை உள்ளடிக்கியது.
அதோடு ரக்தகொண்டா, சிட்டமகொண்டா, கலிகொண்டா, சுங்கரிமெட்டா போன்ற பிரம்மாண்ட மலைகள் அரக்கு பள்ளத்தாக்கை சூழ்ந்து காணப்படுகின்றன. இதில் சீமாந்திராவின் உயரமான குன்றாக கலிகொண்டா மலைப்பகுதி கருதப்படுகிறது.
அரக்கு பள்ளத்தாக்கு அதன் காப்பித் தோட்டங்களுக்காக பிரத்தியேகமாக அறியப்படுகிறது. இதன் காரணமாக நீங்கள் அரக்கு பள்ளத்தாக்கில் காலடி எடுத்து வைத்தவுடன் காற்றில் மிதந்து வரும் காப்பிக் கொட்டையின் நறுமணம் உங்களுக்கு அற்புதமான வரவேற்பை கொடுக்கும். இந்த காப்பித் தோட்டங்கள ஏராளமான பழங்குடியினருக்கு மறுவாழ்வு அளித்து வருகிறது.
இந்தியாவின் முதல் கரிம காப்பி நிறுவனம் 2007-ஆம் ஆண்டு பழங்குடி மக்களை கொண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் 'அரக்கு எமரால்ட்' என்று பெயரிடப்பட்டதுடன், உலகம் முழுக்க புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இன்று இந்த காப்பி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் காப்பி பயிரிடும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரக்கு பள்ளத்தாக்கின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக டிரைபல் மியூசியம் (பழங்குடி அருங்காட்சியகம்), டைடா, போரா குகைகள், சங்க்டா அருவி, பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ் போன்றவை அறியப்படுகின்றன.
இவை தவிர இயற்கையோடு உறவாடும் பசுமை மிக்க காப்பித் தோட்டங்களுக்கு நீங்கள் அரக்கு பள்ளத்தாக்கு வரும் போது கண்டிப்பாக சென்று வர வேண்டும். மேலும் அரக்கு பள்ளத்தாக்கின் எந்த ஒரு சுற்றுலாப் பகுதியுமே அதன் சரித்திர மற்றும் கலாச்சார முக்கியத்துவம் காரணமாக கட்டாயம் பார்க்க வேண்டியவை.
அரக்கு பள்ளத்தாக்கு நாட்டின் முக்கிய நகரங்களுடன் சாலை மற்றும் ரயில் வழியாக நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. அரக்கு நகரம் மற்றும் அரக்கு பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் இரண்டு ரயில் நிலையங்களும் விசாகப்பட்டணத்துடன் நல்ல ரயில் தொடர்பு கொண்டுள்ளன.
அரக்கு பள்ளத்தாக்குக்கு அருகிலேயே ஷிமிலிகுடா ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 996 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பத்துடன், இந்தியாவின் உயரமான அகல ரயில்பாதை தடமாகவும் கருதப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஷிமிலிகுடா கிராமத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கு செல்லும் சாலையும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சீமாந்திராவின் பிற பகுதிகளிலிருந்து வாடகை கார்கள் மூலம் பயணிகள் அரக்கு பள்ளத்தாக்கை சுலபமாக அடைந்து விட முடியும். அதோடு ஹைதராபாத், விசாகபட்டணம் நகரங்களிலிருந்து அரக்கு பள்ளத்தாக்குக்கு டீலக்ஸ் மற்றும் வால்வோ பேருந்துகள் இயக்கப்படுவதுடன், மற்ற பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற பேருந்துகள் அரக்கு பள்ளத்தாக்குக்கு இயக்கப்படுகின்றன.
அரக்கு பள்ளத்தாக்கில் ஆண்டு முழுவதும் மிதமான வானிலையே நிலவும். இந்த மலைவாசஸ்தலத்திற்கு கோடையில் சுற்றுலா வருவதற்கே பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.
எனினும் பனிக் காலங்களில் உறையவைக்கும் பனிப்பொழிவின்றி இதமான வெப்பநிலை நிலவுவதால் அரக்கு பள்ளத்தாக்கை சுற்றிப் பார்க்க பனிக் காலங்களே சிறந்தது. ஏனெனில் ஹைக்கிங், டிரெக்கிங், ரேப்பெலிங் (இரண்டு கயிர்களை கொண்டு செங்குத்தான மலையில் இருந்து கீழ் இறங்குதல்) போன்ற சாகச பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கு பனிக் காலங்களே சிறந்த தேர்வாக அமையும்.