அரக்கு பள்ளத்தாக்கில் நீங்கள் காலடி எடுத்து வைத்தவுடன் காற்றில் மிதந்து வரும் காப்பிக் கொட்டையின் நறுமணம் உங்களுக்கு அற்புதமான வரவேற்பை கொடுக்கும். இந்த காப்பித் தோட்டங்கள் அரக்கு பள்ளத்தாக்கின் ஆரம்பத்திலேயே பல மைல்கள் அனந்தகிரி குன்று முழுக்க பரந்து விரிந்து கிடக்கிறது. முக்கியமாக இந்த காப்பித் தோட்டங்கள ஏராளமான பழங்குடியினருக்கு மறுவாழ்வு அளித்து வருகிறது.
இந்தியாவின் முதல் கரிம காப்பி நிறுவனம் 2007-ஆம் ஆண்டு பழங்குடி மக்களை கொண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் 'அரக்கு எமரால்ட்' என்று பெயரிடப்பட்டதுடன், உலகம் முழுக்க புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இன்று இந்த காப்பி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் காப்பி பயிரிடும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.