பெயரைச் சொல்லும்போதே அதிரவைக்கும் ஒரு அசத்தல் நீர்வீழ்ச்சிதான் இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி ஓடி வரும் சாலக்குடி ஆற்றின் பாதையில் இந்த அற்புத நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது.
பார்ப்பதற்கு நயாகராவின் குட்டி வடிவம் போன்றே காட்சியளிப்பதால் ‘இந்தியாவின் நயாகரா’ எனும் விசேஷப்பெயரையும் இந்த நீர்வீழ்ச்சி பெற்றுள்ளது. சாலக்குடி ஆற்றுப்பெருக்கானது வழச்சல் வனச்சரகத்தின் வழியே பாய்ந்தோடி வந்து இந்த நீர்வீழ்ச்சியில் வழிந்து கீழே ஆழத்தில் ஓடும் ஆற்றில் விழுகிறது.
24 மீட்டர் (82 அடி) உயரத்திலிருந்து நான்கு பிரிவுகளாக இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. 100 மீட்டர் (330 அடி) அகலத்தை கொன்டுள்ளதால் மெய்சிலிர்க்க வைக்கும் பிரம்மாண்ட தோற்றத்துடன் இந்த நீர்வீழ்ச்சி நம்மை முதல் பார்வையிலேயே திகைக்க வைத்துவிடுகிறது.
நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பல்வேறு தளங்களிலிருந்து வெவ்வேறு கோணத்தில் இதன் அழகை பயணிகள் ரசிக்கலாம். நீர்வீழ்ச்சியை நோக்கிச்செல்லும் பாதையிலிருந்து பார்க்கும்போதே நீர்வீழ்ச்சியின் முன்புற தோற்றமும் கீழே ஆழத்தில் ஓடும் ஆறும் காட்சியளிக்கின்றன.
பாறைகளில் வழிந்து சிதறும் வெண்ணிறப்பரப்பு நீரா, புகையா, ஆவியா, மேகமா, பஞ்சுப்பொதியா என்றெல்லாம் நம்மை மனம் தடுமாற வைக்கும் அமானுஷ்யத்துடன், பிரதேசம் முழுதும் எதிரொலிக்கும் ஆங்கார ஓசையுடன் இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. அதுதான் இயற்கையின் குரலா என்று கூட நீங்கள் வியக்கக்கூடும்.
உச்சியிலிருந்தும் இந்த நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிக்கலாம். இதற்கு நீங்கள் ஒரு அனுமதி சீட்டு வாங்கி பிரதான வாசல் வழியாக நுழைய வேண்டியுள்ளது. நீர்வீழ்ச்சிக்கு அருகிலேயே சிறிய உணவகங்கள், காபி கூடங்கள் போன்றவை பயணிகள் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக அமைந்துள்ளன.
மக்கள் நடமாட்டத்தை தாங்கும் அளவுக்கு நீர்வீழ்ச்சியை நோக்கி செல்லும் பாதைகள் நன்கு அமைக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் இன்னமும் மெருகேற்றவேண்டிய நிலையில் உள்ளதால் இந்தப்பகுதியில் நடமாடும்போது மிகுந்த கவனம் அவசியம்.
நீர்விழ்ச்சியின் அடிப்பகுதியிலிருந்தும் மேலே பார்த்து ரசிக்க முடியும் என்றாலும் அதற்கான பாதைகள் இன்னும் சரிவர அமைக்கப்படாததால் மிகுந்த சரிவுடன் காட்சியளிக்கின்றன.
ஆகவே அழகைக்கண்டு மயங்கும்போது அவசரமில்லாத கவனமும் மிக அவசியம். கீழே இருந்து மேலே நீர்வீழ்ச்சியை காணும் காட்சிக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்றாலும் கீழ்நோக்கி இறங்குவது சாகசப்பயணத்துக்கு சமம் என்பதால் கவனம், பாதுகாப்பு, மனதிடம் போன்றவை மிக அவசியம்.
புன்னகை மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற அதிர்ச்சியூட்டும் தற்கொலைக்காட்சியின் பின்னணியில் நாம் காணும் பிரம்மாண்ட நீர்வீழ்ச்சிதான் இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. இந்த அற்புத நீர்வீழ்ச்சிக்கு தமிழ்நாட்டு பயணிகள் யாவருமே வாழ்வில் ஒரு முறையாவது விஜயம் செய்து ரசிப்பது அவசியம்.