சோலயார் மலைப்பகுதியில் அதிரப்பள்ளி மழைக்காடுகளுக்குள்ளே இந்த வழச்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியிலிருந்து 5 கி.மீ தூரத்திலும் சாலக்குடி காடுகளிலிருந்து 36 கி.மீ தூரத்திலும் உள்ளது.
ஓவியம் போன்ற அழகுடன் காட்சியளிக்கும் இந்த நீர்வீழ்ச்சி ஒரு மாற்றத்தை தேடும் இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் ஏற்றது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைப்போல் அல்லாது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் வேகமாக ஓடும் ஆறு போன்றே இந்த நீர்வீழ்ச்சி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
பார்ப்பதற்கு நயாகரா போன்றே இதுவும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. நீரின் பரப்பு எங்கிருக்கிறது என்று இனங்காண முடியாத அளவுக்கு பிரமாண்டமான நீர்ப்புகையுடன் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி காட்சியளிப்பது பிரமிக்க வைக்கும் ஒரு தரிசனமாகும். வழச்சல் நீர்வீழ்ச்சியின் காட்சிதளத்திற்கு செல்லும் வாயிற்பகுதியில் பொது நுழைவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
வழச்சல் நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பகுதிகள் ஆற்றங்கரை பசுமைத்தாவரங்களை மிகுதியாக கொண்டுள்ளன. மேலும் இப்பகுதி முக்கியமான பறவைகள் சரணாலயமாகவும் இந்தியாவின் சிறந்த யானைப்பாதுக்காப்பு வனச்சரகமாகவும் அறியப்படுகிறது.
பொதுவாக குறைந்த நீர் மட்டத்துடன் காணப்படும் இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தின் போது நீர்மட்டம் உயர்ந்து மிக பிரம்மாண்டமான அகலமான ஆக்ரோஷமான வேகத்துடன் நீர் வழியும் நீர்வீழ்ச்சியாக மாறி விடுகிறது.
இதுபோன்ற நீர்வீழ்ச்சிகள் தமிழ்நாட்டின் எல்லையில்தான் இருக்கின்றனவா என்று உங்களை மலைக்க வைக்கும் ஒரு மஹோன்னத இயற்கை தரிசனத்தை வழங்குவதற்காக வழச்சல் நீர்வீழ்ச்சி காத்திருக்கிறது.