மஹாராஷ்டிரா மாநிலத்தில் மராத்வாடா பிரதேசத்தில் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய சிறிய நகரம் இந்த ஔந்தா நாகநாத் ஆகும்.
ஔந்தா நாகநாத் – முதல் ஜோதிர்லிங்க ஸ்தலம்
ஔந்தா நாகநாத் எனும் ஆன்மீக திருத்தலம் இந்தியாவின் பனிரெண்டு புனிதமான ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் புகழ் பெற்று விளங்குகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே அமைந்துள்ள ஐந்து ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.
மஹாபாரத பாண்டவ சகோதரர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர் வனவாச காலத்தின்போது இங்குள்ள ஜோதிர்லிங்கத்தை சிவனுக்காக உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த ஔந்தா நாகநாத் கோயில் சிவபெருமானுக்காகவே ஹேமந்த்பந்தி கோயிற்சிற்பக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான 60000 சதுர அடி பரப்பளவில் இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் ஒரு முக்கிய அம்சமாக நந்தி சிலையானது கோயிலின் முன்பகுதியை விடுத்து பின்புறத்தில் அமைக்கப்பட்டிருப்பதைச் சொல்லலாம்.
இந்த கோயிலை சுற்றிலும் சிறு சிறு கோயில்கள் இதர ஜோதிர்லிங்கங்களை குறிக்கும் விதமாய் அமைக்கப்பட்டுள்ளன. தத்தாத்ரேயர், நீலகண்டேஷ்வரர், தசாவதாரம், வேதவியாசலிங்கம், மற்றும் கணபதி சிலை போன்ற அம்சங்களையும் இந்த கோயிலில் காணலாம்.
ஆன்மீக திருத்தலம்
வருடத்தின் எந்த நாளிலும் விஜயம் செய்வதற்கேற்றவாறு ஔந்தா நாகநாத் ஸ்தலம் அமைந்துள்ளது. இருப்பினும் கோடைக்காலத்தில் தாங்க முடியாத உஷ்ணம் நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிங்கோலி நகருக்கு மிக அருகில் உள்ள இந்த புனிதத்தலமானது எளிதில் பயணம் மேற்கொள்வதற்கேற்ற போக்குவரத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
ஹிங்கோலி நகருக்கு நீங்கள் விஜயம் செய்ய நேர்ந்தால் இந்த ஔந்தா நாகநாத் திருத்தலத்துக்கும் ஒரு முறை சென்று வருவது சிறந்தது. இந்த அற்புதமான ஆன்மிக ஸ்தலம் உங்களுள் இறை நம்பிக்கையை தூண்டி சாந்தத்தை அளிக்கும் சக்தியைக்கொண்டுள்ளது மட்டுமல்லாமல் தன் அற்புதமான வடிவமைப்பின் மூலம் உங்களை வரலாற்றுக்காலத்துக்கும் கொண்டு செல்கிறது.