பாதாமியிலுள்ள இந்த அருங்காட்சியகம் பயணிகள் அவசியம் விஜயம் செய்யவேண்டிய அம்சமாகும். இந்தியத் தொல்லியல் துறையால் 1979ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மியூசியமானது துவக்கக் காலத்தில் கல்வெட்டுகள், குறிப்புகள் மற்றும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்பொருட்களை சேகரித்து வைக்கவே பயன்பட்டது. இருப்பினும் 1982ம் ஆண்டிலிருந்து சில தற்காலத்திய உள்ளூர் சிற்பங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடும்போது பயணிகள் 6ம் நூற்றாண்டிலிருந்து 16 ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட சில லஜ்ஜா-கௌரி தாய்மை அல்லது பெண்மையைக்குறிக்கும் சிலைகள் மற்றும் சில குறிப்பேடுகள் போன்றவற்றைக் காணலாம்.
நான்கு காட்சிக்கூடங்களை கொண்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் சிவபெருமான் மற்றும் விஷ்ணுவின் பல அவதார சிற்பங்கள், கணபதி சிற்பங்கள் மற்றும் பகவத் கீதை தத்துவங்களைக் குறிக்கும் காட்சிச்சிற்பங்கள் போன்றவை நிறைந்துள்ளன.ஒரு அழகிய நந்தி சிலையொன்று இந்த அருங்காட்சியகத்தின் வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
நான்கு காட்சிக்கூடங்களும் முன்பகுதியில் உள்ள திறந்தவெளிக்கூடத்துடன் இணைக்கப்பட்டு புராதன அழகுடன் அமைந்துள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் உள்ளேயே சிட்லாபதி குகை ஒரு அங்கமாக உள்ளது.
கற்சிற்பங்களுடன் வரலாற்று காலத்துக்கு முந்தைய கலைப்பொருட்களும் குறிப்பேட்டு படிவங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மையத்தில் உள்ள திறந்த வெளிக் காட்சிக்கூடத்தில் வீரக்கற்கள் மற்றும் துவாரபாலக இரட்டைச்சிற்பங்கள், கலவெட்டுகள் போன்றவை காட்சியளிக்கின்றன.
அருங்காட்சியகத்தின் புதிய காட்சிக்கூடத்தில் பல கல்வெட்டுக்குறிப்புகள் புராதனக் கட்டிடக்கலைத் தகவல்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.