வித்தியாசமான பெயரை கொண்டிருக்கும் இந்த படகுத்துறை அல்லது ஏரிக்கரை பூங்கா அதிக அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு பொழுதுபோக்கு ஸ்தலமாகும். இது பெங்களூரின் வெளிவட்ட நெடுஞ்சாலையில் ஹெப்பல் கெம்ப புரா பகுதியில் அமைந்துள்ளது.
நாகவரா ஏரிக்கரையை ஒட்டி 1.5 கி.மீ நீளத்துக்கு இந்த பூங்கா அமைந்துள்ளது. 25 அடி உயர புத்தர் சிலையை கொண்டுள்ள இந்தப் பூங்காவுக்கு புத்தர் பிறந்த இடமான லும்பினி எனும் இடத்தின் பெயரையே வைத்துள்ளனர். குடும்பத்துடன் அமைதியாக பொழுது போக்குவதற்கு மிகவும் பொருத்தமான இடமாகும்.
பூங்காவிலிருந்தபடி பரந்து கிடக்கும் ஏரி நீர்த்தேக்கத்தைப் பார்த்து ரசிப்பது மிக இனிமையான அனுபவம். தீம் பார்க் போன்றே குழந்தைகள் விளையாடுவதற்கென்று பல வசதிகள் உள்ளதால் குடும்பத்துடன் இங்கு வருகை தருவதை பலரும் விரும்புகின்றனர்.படகுச்சவாரி இங்குள்ள பிரதான பொழுது போக்கு அம்சமாக கருதப்பட்டாலும் குழந்தைகளுக்கான இன்ன பிற விளையாட்டுகளான குதிக்கும் ரயில், விளையாட்டு பகுதி, பொம்மை சவாரி, ஸ்பானிஷ் எருது சவாரி போன்றவை இங்கு பிரசித்தமாக கருதப்படுகின்றன.
பெங்களூரில் கடற்கரையே இல்லை எனும் குறையை நிவர்த்தி செய்வதுபோல இந்த லும்பினி பூங்கா நீர்த்தேக்கம் காணப்படுகிறது. சிறு அலைகள் வந்து கரையை மோதுவதை இங்கு காணலாம். ஏரியை ஒட்டிய சாலையில் குடும்பத்துடன் நடந்தபடியே ஏரியின் அழகை கண் குளிர பார்த்து ரசிக்கலாம். இங்கு குறைந்த விலையில் உணவுப்பொருடகளை வழங்கும் பல சிறு உணவகங்களும் உள்ளன.
பூங்காவில் அமைதியாக ஆசுவாசமாக உட்கார்ந்து ரசிக்கவோ அல்லது படகுச்சவாரி போன்ற சாகச பொழுது போக்கில் ஈடுபடவோ மிகப்பொருத்தமான குடும்ப பொழுதுபோக்கு மையம் இந்த லும்பினி கார்டன்ஸ்.