பரத்பூரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் பந்த் பாரேத்தா பாதுகாக்கப்பட்ட கட்டுப்பகுதி அமைந்திருக்கிறது. இந்தக் காடுகளில் சிறுத்தைப்புலி, சாம்பார் மான், காட்டுப்பன்றி, கழுதைப்புலி போன்ற விலங்குகளை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். அதோடு 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கு இந்த காட்டுபகுதி வாழ்விடமாக இருந்து வருகிறது.
பந்த் பாரேத்தா பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் காகுந்த் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணை சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்று. இந்த அணை 1866-ஆம் ஆண்டு ஜஸ்வந்த் சிங் மகாராஜாவால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1887-ஆம் ஆண்டு ராம் சிங் மகாராஜாவால் கட்டி முடிக்கப்பட்டது. மேலும் இந்தப் பகுதியில் பரத்பூர் அரசு குடும்பத்துக்கு சொந்தமான அரண்மனை ஒன்றும் உள்ளது.