பீமேஸ்வரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் கண்டிப்பாக பீமேஸ்வரி மீன்பிடி முகாமுக்கு செல்ல வேண்டும். இந்த மீன்பிடி முகாம் மகாசீர் எனும் அரிய மீன்களின் வாசஸ்தலமாக இருந்து வருகிறது.
அதோடு இங்கு பலவண்ணங்களில் கொண்டைகள் உடைய குயில்கள், நெடுங்கிளாத்தி என்ற பறவை, சாம்பல் தலை கழுகு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களையும் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் புள்ளி மான், சாம்பார் மான், யானை, குள்ள நரி, சிறுத்தை போன்ற மிருகங்களையும் நீங்கள் மீன் பிடி முகாமில் பார்க்கலாம்.பீமேஸ்வரியில் வேகமாக சலசலத்து ஓடும் காவேரி ஆற்றில் நீங்கள் இக்கரையிலிருந்து, அக்கரைக்கு நீந்தி செல்வது சிலிர்ப்பூட்டும் சாகசமாக இருக்கும். அதோடு கட்டுமரத்தில் செல்வதும், பரிசலில் செல்வதும் சிறந்த அனுபவமாக அமையும்.
பீமேஸ்வரி மீன் பிடி முகாமில் மரக்குடில்கள் மற்றும் கூடாரம் அமைப்பது, ஊஞ்சற் படுக்கை செய்வது, சுடரொளிக் களியாட்டத்தில் கலந்து கொள்வது போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளிலும், பொழுதுபோக்குகளிலும் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் நீங்கள் இங்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் மீன்பிடித்து மகிழலாம். ஆனால் பிடித்த மீன்களை வீட்டுக்கு எடுத்து செல்ல மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பீமேஸ்வரி மீன் பிடி முகாமுக்கு சுற்றுலா வருவதற்கு ஜூன் முதல் பிப்ரவரி வரையிலான காலங்கள் சிறப்பானதாக இருக்கும்.