பீஜாப்பூரில் பயணிகள் காண வேண்டிய மற்றொரு வரலாற்றுச் சின்னம் நகரின் கிழக்கு எல்லையில் காணப்படும் சந்த் பாவ்டி என்று அழைக்கப்படும் தடாகக்குளமாகும் (படிக்கட்டுக்குளம்). இது 1557-1580 ஆண்டுளில் அடில் ஷா மன்னரால் அவரது மனைவி சந்த் பீபி என்பவரின் பெயரில் கட்டப்பட்டுள்ளது.
விஜயநகர சாம்ராஜ்யம் உடைந்தபின்னர் அதிக எண்ணிக்கையில் மக்கள் பீஜாப்புரில் குடி புகுந்தனர். அப்போது நகரின் கட்டுமானத் தேவைகள் அதிகரித்தன. எனவே நகர நீர்த்தேவைக்காக இந்த குளம் கட்டப்பட்டிருக்கிறது. இக்காலத்திய அளவுப்படி இது 200 லட்சம் லிட்டர் நீரை தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்டுள்ளது.இந்த தடாகக்குளத்தின் வடிவமைப்பானது பிற்காலத்தில் கட்டப்பட்ட ஏனைய குளங்களுக்கு முன்மாதிரியாக விளங்கியுள்ளது தெரிகிறது. இந்தக்குளத்தின் அருகில் ஒரு கலையம்சம் கொண்ட மண்டபமும் அமைந்துள்ளது. இது குளப்பராமரிப்பு ஊழியர்களுக்கு பயன்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும் இம்மண்டபத்தின் வேலைப்பாடுகளை பார்க்கும் போது அரச குடும்பத்தினர் சடங்குகள் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்துவதற்காக இது கட்டப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.