பீஜாப்பூருக்கு விஜயம் செய்யும் பயணிகளின் பட்டியலில் முதலிடம் பெற வேண்டியது இந்த கோல் கும்பாஸ் என்றழைக்கப்படும் அற்புத வரலாற்றுக் கலைச்சின்னமாகும்.
உலகிலேயே இரண்டாவது பெரிய சமாதி மண்டபம் என்ற புகழைப்பெற்றுள்ள இது பீஜாப்பூர் சுல்தான் முஹம்மத் அடில் ஷாவின் கல்லறை ஸ்தலமாகும். இவர் 1627முதல் 1657 வரை கோலோச்சிய ஷாஹி ராஜவம்ச மன்னராவார்.1659ம் ஆண்டில் யாக்கத் எனும் பிரசித்தி பெற்ற பாரசீக கட்டிடக்கலைச் சிற்பியால் இந்த கோல் கும்பாஸ் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான 44 மீட்டர் விட்டமுடைய இதன் குமிழ் விதான (அரைக்கோள) கட்டமைப்பு எந்தவித பிடிப்பு தூண்களும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது ஒரு கட்டிடக்கலை அதிசயமாகும்.
உட்பகுதியில் விதானத்தை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கும் காட்சி மாடம் ஒரு ஒலியியல் தொழில் நுட்பத்துடன் அறிவியல் பூர்வமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மாடத்தின் ஒரு பகுதியில் எழுப்பப்படும் ஒலியானது எதிர்ப்பகுதியில் தெளிவாக 7 முறை எதிரொலிக்கின்றது.
இந்த மாடப்பகுதியிலிருந்து இசைக்கப்படும் வாத்திய இசை அல்லது குரலிசை பிற பகுதிகளில் நன்கு கேட்குமாறு ஒலியியல் வடிவமைப்புடன் கோல் கும்பாஸ் நிர்மாணிக்கப்பட்டிருப்பதை பயணிகள் நேரில் கண்டறியலாம்.கோல் கும்பாஸின் நான்கு மூலைகளிலும் எட்டு அடுக்குகளைக் கொண்ட நான்கு தூண் கோபுரங்கள்(மினாரெட்) சூழ்ந்துள்ளன. இவற்றின் உள்ளே காணப்படும் வளைவுப்படிகள் மூலமாக உச்சியில் ஏறியும் பார்க்கலாம்(அனுமதி கிடைப்பின்). 160 அடி உயரத்தில் இந்த மினாரெட் மேலிருந்து கீழே பீஜாப்பூரை நகரைப் பார்க்கும் அனுபவம் பிரமிப்பூட்டக்கூடியது. சுற்றுச்சுவருடன் கூடிய ஒரு அழகிய தோட்டப்பூங்காவின் நடுவில் இந்த கோல் கும்பாஸ் சுமார் 1700 சதுர மீட்டர் பரப்பளவிலும் 51 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது.