மும்பை மாநகரின் வடக்குப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தஹானு எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் இந்த போர்டி கடற்கரைக்கிராமம் அமைந்துள்ளது. சுத்தமான ஏகாந்தமான கடற்கரை இயற்கை எழிலுடன் இந்தப்பகுதியில் காணப்படுகிறது. இங்கு மணல் தனது உண்மையான நிறத்தையும் தன்மையையும் கொண்டிருப்பதைக் காணலாம்.
கறுப்பு நிறத்தில் பிசுபிசுப்பு தன்மையுடன் மணல் இங்கு காணப்படுகிறது. சப்போட்டா மரங்கள் கடற்கரையை ஒட்டியே வரிசையாக அமைந்திருப்பது இப்பகுதிக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
ஒரு முக்கிய அம்சமாக இந்த கடற்கரையில் கடலின் ஆழம் இடுப்பளவு வரை மட்டுமே இருப்பதால் நீரில் நீச்சல் அடிக்கவும் விளையாடவும் ஏற்ற விதத்தில் உள்ளது.
மும்பை பெருநகரத்திலிருந்து 153 கி.மீ தூரத்திலேயே இந்த போர்டி கடற்கரை அமைந்துள்ளது. அதிகம் கூட்டம் இல்லாத அதிகம் அறியப்படாத இடம் என்பதால் இந்த கடற்கரையி இயற்கை வனப்பு ஆர்வமுள்ள சுற்றுலாப்பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது.
ஒரு ஆர்வமுள்ள சுற்றுலாப்பயணி எதிர்பார்க்கும் எல்லா சுற்றுலா அம்சங்களையும் இந்த போர்டி கடற்கரை நகரம் பெற்றுள்ளது. தனக்கேயுரிய இயற்கை எழில் அம்சங்களை கொண்டிருக்கும் இந்த போர்டி கடற்கரை வெயில் காய்வதற்கும் சப்போட்டா தோப்புகளில் ரசனையுடன் காலாற நடப்பதற்கும் அல்லது உங்கள் அன்புக்குரியவருடன் அமைதியாக நேரத்தைக்கடத்துவதற்கும் மிகவும் ஏற்ற ஸ்தலமாகும்.
என்னென்ன சுற்றுலா அம்சங்கள் இங்கு உள்ளன?
முன்னரே குறிப்பிட்டுள்ளபடி போர்டி கடற்கரை ஒரு ரம்யமான சிற்றுலாத்தலமாக, உல்லாச நடைபயணத்துக்கு ஏற்றதாகவும் அத்துடன் குதிரைச்சவாரி செல்வதற்கும் உகந்த இடமாக உள்ளது.
மஹாராஷ்டிர மாநில அரசாங்கத்தின் மரங்கள் பாதுகாப்பு துறை இப்பகுதியின் இயற்கை அழகு பாழாகிவிடாமல் இருப்பதற்கு தனிக்கவனம் செலுத்துவதால் இந்த கடற்கரை ஸ்தலம் தனித்தன்மையான எழிலுடன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
இது தவிர இந்த போர்டி நகரம் சௌராஷ்டிரா இனப்பிரிவினருக்கான புனித யாத்ரிக ஸ்தலமாகவும் விளங்குகிறது. சௌராஷ்டிரர்களின் மெக்கா என்று பிரசித்தமாக அறியப்படுகிற இந்த ஸ்தலத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் புனித நெருப்பு உள்ளது.
போர்டி பகுதியில் பெரும்பான்மையாக கனிவான குணத்தைக்கொண்ட பார்ஸி இன மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் சிறப்பான உள்ளூர் உணவு வகைகளையும் தற்காலிக தங்கும் வசதிக்காக வீடுகளையும் பயணிகளுக்கு அளிக்கின்றனர்.
இங்கிருந்து 8 கி.மீ தூரத்தில் பஹ்ராட் மலையில் பஹ்ராட் குகைகள் அமைந்துள்ளன. இது மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். பிரமிக்க வைக்கும்படியாக 1500 அடியில் எழுந்து நிற்கும் இந்த மலை பார்ஸி இனத்தாரால் புனிதமாக கருதப்படுகிறது.
அருகாமையில் உள்ள மல்லிநாத் ஜெயின் தீர்த் கொஸ்பாட் கோயில் ஜைனை வகுப்பினர்க்கான புனித யாத்ரீக ஸ்தலமாக பெயர் பெற்றுள்ளது. ரிஷப் கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் பிரபாதேவி மலைகளில் அமைந்துள்ளது.
போர்டியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள உம்பர்காவ்ன் என்னுமிடத்தில் கல்பதரு பாட்டனிக்கல் கார்டன் அமைந்துள்ளது. மேலும் மஹாபாரதா, ராமாயணா போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித்தொடர்கள் படமாக்கப்பட்ட விருந்தாவன் ஸ்டுடியோ இங்கு அருகிலேயே உள்ளது.
வரலாற்றுக்காலத்தில் சிறைச்சாலையாக விளங்கிய தஹானு கோட்டை இன்று அக்காலத்திய உன்னதமான பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் ஒரு சின்னமாக காணப்படுகிறது.
மழைக்காலம் முடிந்து குளிர்காலம் துவங்க ஆரம்பிக்கும் சமயத்தில் இங்கு விஜயம் செய்வது சுற்றுலாவுக்கு உகந்ததாக உள்ளது. நவம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை உள்ள இடைப்பட்ட காலம் மிதமான சீதொஷ்ண நிலையுடன், இனிமையான சுற்றுப்புற சூழலுடன் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 120 C வரை குறைந்து காணப்படுகிறது.
பெருநகரமான மும்பைக்கு மிக அருகிலேயே அமைந்திருப்பதால் போர்டி கடற்கரையானது விமானம், ரயில், சாலை போன்ற எல்லா போக்குவரத்து மார்க்கங்களின் மூலமாகவும் எளிதில் சென்றடையும் வசதியுடன் உள்ளது.
அருகிலுள்ள விமான நிலையமாக சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. ரயிலில் செல்வதென்றால் தஹானு ரயில் நிலையம் போர்டிக்கு அருகில் உள்ளது.
சாலை மார்க்கமாக இங்கு வருவதற்கு மும்பையிலிருந்து அரசுப்போக்குவரத்து பேருந்துகளும் தனியார் சுற்றுலா பேருந்துகளும் அதிக அளவின் கிடைக்கின்றன.
சுலபமான போக்குவரத்து வசதிகள் மற்றும் கவர்ந்திழுக்கும் இயற்கை எழில் அம்சங்களுடன் விளங்கும் இந்த போர்டி கடற்கரை ஸ்தலம் வார விடுமுறையை உற்சாகமாக கழிப்பதற்கேற்ற சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது.
நகர வாழ்க்கையின் கசடுகள் நம்மிலிருந்து விடுபட இது போன்ற இயற்கை அழகுச்சூழல் உதவுகிறது. தோப்பின் நடுவே ஓய்வான நடை, வெயில் காய்தல், உற்சாகமூட்டும் கடல் நீச்சல் போன்றவை உங்கள் மனதை அழுத்தங்களிலிருந்து விடுவித்து இலேசாக்குகின்றன.
சூரியனின் தங்க நிறக்கதிர்களில் ஜொலிக்கும் இந்த கடற்கரையின் இயற்கை வனப்பு உங்கள் மனதை விட்டு நீண்ட நாட்களுக்கு விலகாது என்பது மட்டும் நிச்சயம்.