கடல் மட்டத்திலிருந்து 2010 மீ உயரத்தில் வீற்றுள்ள இந்த சௌகோரி எனும் மலைவாசத்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்கு இமயமலைத்தொடர் மலைகளின் மத்தியில் அமைந்துள்ள இந்த நகரம் வடக்கில் திபெத் மற்றும் தெற்கில் தேராய் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது.
கண்ணைக்கவரும் இயற்கைக்காட்சிகள் மற்றும் பசுமையான பைன் மரங்கள் மற்றும் ஓக் மரங்கள் அடர்ந்த ஊசியிலைக்காடுகள் ஆகியவற்றை இந்த சிறு கிராமம் கொண்டுள்ளது. இவை தவிர கவர்ச்சியான சோள வயல்கள் மற்றும் பழத்தோப்புகள் போன்றவற்றையும் இந்த எழில் கிராமத்தில் பார்த்து ரசிக்கலாம்.
சௌகோரி பகுதியில் பல புராதன கோயில்கள் அமைந்துள்ளன. பெரிநாக் எனும் கிராமத்தில் உள்ள நாகமந்திர் எனும் கோயில் இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த பாம்புக்கோயில் நாகவேணி மன்ன்னர் பேணிமாதவா என்பவரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்த்உ 1350 மீ உயரத்தில் வீற்றிருக்கும் பாதாள் புவனேஷ்வர் எனும் கோயிலும் பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலை ஒரு சுரங்கப்பாதை போன்ற குகையின் வழியாக சென்றடையலாம்.
சௌகோரி நகரம் இங்குள்ள மஹாகாளி கோயிலுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. ஆதி குரு சங்கராச்சாரியாரால் இந்த இடம் சக்தி பீடம் உருவாக்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
பித்தோராகர் சந்தக் சாலையில் பயணிகள் இல்லத்திற்கு அருகில் அமைந்துள்ள உல்காதேவி கோயிலுக்கு சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்யலாம். குன்சேரா தேவி எனும் கோயிலில் பல தெய்வங்களின் கற்சிற்பங்களை பார்த்து ரசிக்கலாம். இவை தவிர சௌகோரியில் கமாக்ஷா கோயில் மற்றும் கேதார் கோயில் போன்றவையும் பிரசித்தமாக அறியப்படுகின்றன.
சௌகோரி மலைக்கிராமத்திற்கு பயணிகள் மிகச்சுலபமாக விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக சென்றடையலாம். சௌகோரிக்கு மிக அருகாமையில் உள்ள சர்வதேச விமான நிலையம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையமாகும்.
கத்கோடம் எனும் ரயில் நிலையமும் சௌகோரிக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்து பயணிகள் டாக்சிகள் மற்றும் பேருந்துகள் மூலம் சௌகோரிக்கு வரலாம். கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்தின் துவக்கம் ஆகியவை சௌகோரிக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்ற பருவங்களாக விளங்குகின்றன.