மகாராஷ்டிராவின் ராஜ்காட் மாவட்டத்தை சேர்ந்த சாவ்ல் நகரம் முன்பு போர்த்துகீசியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இது மும்பையிலிருந்து 111 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த நகரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் இன்று வெறும் சிதைவுகளாகவே எஞ்சியுள்ளன.
சாவ்ல் நகருக்கு 500 வருடங்களுக்கு முன்பு, 1521-ஆம் ஆண்டு போர்த்துகீசியர்கள் வந்து குடியேறியதாக வரலாறு கூறுகிறது. இந்த நகருக்கு 1570-ஆண்டு படையெடுத்து வந்த அகமதாபாத் நகரின் நிஜாம் ஷாஹி சுல்தான் நகரை முழுவதுமாக தரைமட்டமாக்கினார். அதன் பின்பு இந்த நகரம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 1613-ஆம் ஆண்டு புதிய நகரமாக உதயமானது.
பார்க்க வேண்டிய இடங்கள்
அலிபாக் எனும் கடற்கரை நகரத்துக்கு அருகில் உள்ள சாவ்ல் நகரம், பல்வேறு சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியையும், எழுச்சியையும் கண்டுள்ளது. இந்த சாவ்ல் நகரம் முழுக்க போர்த்துகீசிய காலத்து யூதர்களின் திருக்கோயில்கள் மற்றும் தொன்மையான தேவாலயங்களின் சிதைவுகள் நிறைந்து கிடக்கும். இங்குள்ள சாவ்ல் கோட்டையும், அதற்கு இணையான கொர்லை கோட்டையும் நம்மை இறந்த காலத்தில் பயணிக்க செய்யும் அற்புதங்கள்.
அதே போல் கொர்லை துறைமுகத்துக்கு அருகே உள்ள சாவ்ல் காடு என்ற கலங்கரை விளக்கமும் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ரேவ்தந்தா கடற்கரையில் நின்றுகொண்டு தொடுவானத்தை ரசிக்கும் அனுபவம் உங்கள் மனதில் அழியா சித்திரமாய் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். அதோடு சமயச் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும் ஒருங்கே அமையப்பெற்ற தத்தா மந்திரின் உச்சியில் இருந்து நகரத்தை காணும் காட்சி வசீகரமானது.
ஒரு சில தகவல்கள்
சாவ்ல் நகரம் ஆண்டு முழுவதும் இதமான வானிலையையே கொண்டிருக்கும். இங்கு ஒருபோதும் வாட்டி வதைக்கும் வெயிலையோ, நடுங்க வைக்கும் குளிரையோ காணமுடியாது. எனவே பயணிகள் எந்த காலங்களிலும் இங்கு சுற்றுலா வரலாம். அதிலும் குளிர் காலத்தில் சாவ்ல் நகருக்கு சுற்றுலா வந்தால் சிறப்பாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் சாவ்ல் நகரம் அனைத்து நகரங்களுடனும் விமானம், ரயில் மற்றும் சாலை வழியாகவும் இணைக்கப்படிருகிறது. இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரம் உங்களை ஏகபோக இன்பத்தில் ஆழ்த்த காத்துக்கொண்டிருக்கிறது.