தக்ஷிண்சித்ரா எனும் இந்த தென்னிந்த பாரம்பரிய கலைக்கிராமத்தை ஒரு அற்புதமான திறந்தவெளி அருங்காட்சியக வளாகம் என்று சொல்லலாம். தக்ஷிண் – எனும் சொல்லுக்கு ‘தெற்கு’ என்பது பொருள்.
சித்ரா எனும் சொல் ‘ஓவியம்’ என்ற பொருளை குறிப்பிடுகிறது. அதாவது தென்னிந்திய கலை மரபை காட்சிப்படுத்தும் ஒரு அற்புத காட்சிக்கூட வளாகமே இந்த ‘தக்ஷிண்சித்ரா’.
தக்ஷிண்சித்ராவில் ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய திராவிட கலைமரபின் ஒன்று சேர்ந்த உன்னதங்களை மாதிரி வடிவமைப்புகளாகவும், சேகரிப்புகளாகவும் காணலாம்.
மேலும் தென்னிந்திய வசிப்பிட கலையம்சங்கள், நாட்டுப்புற இசைமரபு, நடன வடிவங்கள், கட்டிடக்கலை, கைவினை பாரம்பரியம் மற்றும் நாட்டுப்புற வாழ்க்கை மரபுகள் போன்றவை குறித்த துல்லியமான அறிமுகத்தை பார்வையாளர்கள் பெறும் வகையில் பல அம்சங்களை கொண்டதாக இந்த வளாகம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 17 பாரம்பரிய வசிப்பிட மாதிரிகள், தெருக்காட்சிகள், சூழல்காட்சிகள், நிஜக்கலைஞர்கள், கலைநிகழ்ச்சிகள், உணவுக்கூடங்கள் போன்றவை மூலம் இந்த வளாகத்தின் நோக்கம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
அமைதி தவழும் பசுமைச்சூழலின் நடுவே வீற்றிருக்கும் ஒரு திறந்தவெளி அரங்கு இந்த தக்ஷிண்சித்ராவின் ஒரு சிறப்பம்சமாகும். கைவினைப்பொருள் அங்காடி, உரைக்கூடம், தற்காலிக ஓவிய காட்சிக்கூடம், உணவகம், நூலகம் போன்றவை தக்ஷிண்சித்ரா வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கான தனித்தனி அங்கங்கள் அமைக்கப்பட்டிருப்பதும் சுற்றிப்பார்த்து அதனதன் அம்சங்களை புரிந்து கொள்ள வசதியாக உள்ளது.
1996ம் ஆண்டு துவங்கப்பட்ட தக்ஷிண்சித்ரா வளாகம் சுற்றுலாப்பயணிகளிடையே மிக பிரசித்தமாக அறியப்படுகிறது. சென்னைக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு பயணியும் மறக்காமல் விஜயம் செய்ய வேண்டிய ஒரு இடம் தக்ஷிண்சித்ரா என்பதில் ஐயமே இருக்கமுடியாது.
அயல் மண்ணில் பிறந்து இம்மண்ணில் வாழவந்த ஒரு அற்புத பெண் மனத்தின் ஆழத்தில் இந்த முயற்சி கருக்கொண்டு இன்று ‘தக்ஷிண்சித்ரா’வாக ‘உரு’வாகியுள்ளது என்பது ஒரு பிரமிக்க வைக்கும் ஒரு உண்மையாகும்.