சிவனின் ரூபங்களில் ஒன்றான நடராஜர் எனப்படும் நடன அவதாரக்கோலம் என்று கூறும்போதே அடுத்து நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர் கோயில். அந்த அளவுக்கு இந்த திருத்தலம் அகிலமெங்கும் பிரசித்தம். அந்த அகிலப் பிரசித்திக்கு எல்லா வகையிலும் தகுதி வாய்ந்த ஒரு பிரமாண்ட கோயில் வளாகம்தான் இந்த நடராஜர் கோயில்.
இது நாடாண்ட சோழ வம்சத்தின் அடையாளச்சின்னம். அறத்துக்கும் ஆன்மீகத்துக்கும் திராவிட பூமியின் முன்னோர்கள் அளித்துச்சென்ற அங்கீகாரம். அறமே ஆன்மீகம் - ஆன்மீகமே அறம் என்றே வாழ்ந்திட்ட ஆட்சி மரபின் சாசனம்.
இது கோயில் மட்டுமல்ல, காலப்பெட்டகமும்கூட!. வெவ்வேறு காலகட்டத்தில் பல ராஜ வம்சங்களால் இந்த கோயிலில் புதுப்பிப்பு செய்யப்பட்டும், புதிய கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டும் இருக்கிறது.
ஆயினும் ஒட்டுமொத்த கோயில் வளாகமும் நகரின் மையமாக அடுக்கடுக்கான தொகுதிகளை கொண்டு அமைந்திருப்பது அற்புதமான கட்டிடக்கலை அம்சமாக கருதப்படுகிறது.
கோபுர வாயிலை தாண்டி கோயில் வளாகத்தில் கால் பதித்த உடனேயே நம்மை சூழ்ந்து கொள்கிறது புராதன திராவிடக் கட்டிடக்கலையின் மஹோன்னதம்.
நகரின் மையப்பகுதியில் ஒரு பிரமாண்ட நீள்சதுர அமைப்பில் வீற்றிருக்கும் இந்த கோயிலின் ஒட்டுமொத்த வளாகமும் கோட்டைச்சுவர்கள் போன்று 10 மீ உயரம் கொண்ட கருங்கல் சுவர்களால் பிரிக்கப்பட்ட அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது. அதாவது கோயிலின் கருவறை அமைப்பு தரைமட்டத்திற்கு கீழே பாதாளவெளியில் வீற்றிருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
வெளிவாசலை கடந்தவுடன் முதல் பிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி கோட்டைசுவர் அமைப்பினால் நாற்புறமும் சூழப்பட்டு இடம்பெற்றுள்ளது. கோயில் வளாகத்தின் முதல் அங்கமான இந்த நந்தவனப்பகுதி ஒரு வனம் போன்று அமைந்துள்ளது.
அதற்கடுத்து ராஜகோபுர வாசல் வழியாக உள் நுழைந்தபின் கருங்கற்கள் பதிக்கப்பட்ட அடுத்த பிரகார வளாகப்பகுதி காணப்படுகிறது. நான்கு திசையிலும் உள்ள கோபுரங்கள் ஒன்றுக்கொன்று நேர் கோட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தம் எனும் புண்ணியதீர்த்தம், ஆயிரங்கால் மண்டபம், விநாயகர் கோயில், சிவகாம சுந்தரியம்மன் ஆலயம், நந்தி சிலை, நவக்கிரக சன்னதிகள், நடன சபை மற்றும் பல சிறு சன்னதிகள் போன்றவை அமைந்துள்ளன.
மேலும் தூண்களோடு காணப்படும் ஒரு நடைக்கூட அமைப்பும் கோபுரத்தோடு இணைந்த மதிற்சுவரையொட்டியே காணப்படுகிறது. கலைநயம் மிளிரும் இந்த நடைக்கூடம் அவ்வளவாக கவனிக்கப்படாது இருந்தாலும் இது கோயிலின் நுணுக்கமான கட்டிடக்கலை அமைப்புக்கான சான்றாய் தோற்றமளிக்கின்றது.
கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி வலப்புறத்தில் மற்றொரு வாசல் அமைப்பும் உள்ளது. இது திருவிழா ஊர்வலங்களின்போது உற்சவ மூர்த்திகள் வெளிவர பயன்படுத்தப்படுகிறது.
இந்த நான்காவது பிரகாரத்தை அடுத்து கோயிலின் நடுநாயகமாக வீற்றிருக்கும் மூன்றாவது பிரகாரத்திற்குள் இறங்குவதற்கு கிழக்கும் மேற்கும் வாசல்கள் உள்ளன. இந்தப்படிகளின்வழி இறங்கி மூன்றாவது பிரகாரத்தில் நாம் நுழையும்போதே கருங்கல் அமைப்புகளின் பிரம்மாண்டம் மற்றும் இருள் கவிந்த பாதாளத்தின் குளிர்ச்சியோடு கோயில் நம்மை உள்வாங்கி கொள்கிறது.
உயரமான தூண்கள் மற்றும் கருங்கல் சிற்ப அமைப்புகளோடு காட்சியளிக்கும் இந்த மூன்றாவது பிரகாரத்திலிருந்து அடுத்த இரண்டாவது பிரகாரத்திற்குள் நுழைய கிழக்குத்திசையில் ஒரு வாசல் மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது பிரகாரத்தில் தேர்போன்ற சன்னதி, தங்கவிமானம் மற்றும் திறந்தவெளி சுற்றுப்பிரகாரம் போன்றவற்றை காணலாம். மேலும் முதல் பிரகாரமான கருவறை இங்குதான் வீற்றிருக்கிறது.
இதுவே சித்சபை என்றழைக்கப்படுகிறது. இதற்கு எதிரே கனகசபை மற்றும் நிருத்யசபை ஆகியவை அமைந்துள்ளன. இது தவிர மூன்றாவது பிரகாரத்தில்தேவ சபையும், நான்காவது பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ராஜ சபையும் ஆக ஐந்து சபைகள் நடராஜர் கோயிலின் முக்கிய அங்கங்களாக விளங்குகின்றன.
நடராஜர் கோயிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு காட்சியளிக்கிறது. ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது. இதன் மூலம் ‘பொன்வேய்ந்த சோழன்’ எனும் பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது.
கோயிலின் முக்கிய அங்கமாக விளங்கும் தீர்த்தக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் நீர் என்றுமே வற்றுவதில்லை. குளத்தை சுற்றிலும் கற்தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுமண்டபப்பாதை கலைநுணுக்கத்துடன் காட்சியளிக்கிறது.
மேலிருந்து ஒரே சீராக படிகள் குளத்தின் அடிப்பகுதியை நோக்கி இறங்குவதைக்காணலாம். குளத்தின் அடிப்பகுதி ஒன்பது கிணறுகளுடன் முடிவடைதாக சொல்லப்படுகிறது.
கோயிலின் வடக்கு கோபுர வாயிலுக்கு அருகே அமைந்துள்ள சிவகாம சுந்தரி அம்மன் கோயில் ஒரு தனியான கோயில் வளாகமாக கலைநயம் மிக்க கற்சிற்ப அலங்கார நுணுக்கங்களோடு அமைந்துள்ளது.
சிவராத்திரியின்போது நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது. இது தவிர மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி திருமஞ்சனம் போன்ற விழாக்காலங்களில் தேர்த்திருவிழா மற்றும் தரிசனம் போன்ற விமரிசையான சடங்குகள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.