கர்நாடக மாநிலத்தில் புதிய சிக்பல்லாபூர் மாவட்டத்தின் தலைநகராக இந்த சிக்பல்லாபூர் விளங்குகிறது. முன்பு கோலார் மாவட்டத்தின் அங்கமாக இருந்த இந்த நகரத்தில் பல சுவாரசியமான சுற்றுலா அம்சங்கள் காணப்படுகின்றன.
பெங்களூரிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள சிக்பல்லாபூர் அதன் பெயரிலேயே உள்ள மாவட்ட தலைநகராக உள்ளது. மேலும் இந்த மாவட்டம் பிரசித்தி பெற்ற பொறியாளரும் ஆட்சியாளருமான ஷீ விஸ்வேஸ்ரய்யா அவர்கள் பிறந்த இடம் எனும் பெருமையையும் பெற்றுள்ளது.
ஒரு கல்விக்கேந்திரமாக விளங்கும் இந்த நகரத்தில் பல முக்கியமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. விஸ்வேரய்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் ஷீ சத்ய சாய் பாபா யுனிவர்சிட்டி ஆகியவற்றுடன் முட்டனேஹள்ளியில் ஒரு ஐஐடி மையமும் திட்ட ஆலோசனையில் உள்ளது.
நகரின் முக்கியமான சுற்றுலா அம்சங்கள்
சிக்பல்லாபூரில் பல இயற்கையான சுற்றுலா அம்சங்களும் மனித முயற்சியில் உருவான நினைவுச்சின்னங்களும் பயணிகள் கவரும் வகையில் அமைந்துள்ளன. பிரசித்தி பெற்ற நந்தி மலைகள் சிக்பல்லாபூரில் தாலுக்காவில் அமைந்துள்ளது.
இந்த மலையிலுள்ள நந்தீஸ்வரர் கோயில் மற்றும் மலையடிவார கிராமத்தில் அமைந்துள்ள போக நந்தீஸ்வரர் கோயில் ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
சிக்பல்லாபூர் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள விவேகானந்தா நீர்வீழ்ச்சி ஒரு இயற்கை எழில் வாய்ந்த ஸ்தலமாகும். மழைக்காலத்திற்கு பின் இங்கு விஜயம் செய்வது சிறந்தது. மற்றும் சிக்பல்லாபூருக்கு அருகிலுள்ள ரங்கஸ்தலாவில் விஜயநகர பாணியில் கட்டப்பட்ட ஒரு அழகிய விஷ்ணு கோயிலும் அமைந்துள்ளது.
விஸ்வேரய்யா பிறந்த இடமான முத்தெனஹள்ளி சிக்பல்லாபூருக்கு அருகில் உள்ளது. அவரது வீடு ஒரு மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல் சித்ராவதியில் உள்ள சுப்ரமணியர் கோயில், எல்லோடு பகுதியில் உள்ள லக்ஷ்மி ஆதிநாராயண ஸ்வாமி கோயில் மற்றும் கந்தர்வா ஏரி போன்றவையும் முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.
இங்குள்ள மலைகளில் பாறை ஏற்றம் மற்றும் மலை ஏற்றம் போன்ற சாகச பொழுது போக்குகளுக்கு ஏற்ற இடங்கள் ஏராளம் உள்ளன. பெருநகரமான பெங்களூருக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளதால் சிக்பல்லாபூருக்கு விஜயம் செய்வது பயணிகளுக்கு மிக எளிமையானதாகவும் உள்ளது. ரயில் அல்லது சாலை மார்க்கமாக சிக்பல்லாபூருக்கு சிரமமின்றி விஜயம் செய்யலாம்.