சித்தோர்கர் நகரின் மஹோன்னத வரலாற்றுப் பின்னணிக்கான சான்றாக இந்த சித்தோர்கர் கோட்டை கம்பீரமாக எழுந்து நிற்கின்றது. இது மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புற கதைகளின்படி மௌரியர்கள் இந்த கோட்டையை 7ம் நூற்றாண்டில் கட்டியதாக சொல்லப்படுகிறது. மிக அற்புதமான கட்டிடக்கலை அதிசயமான இது 180 மீ உயரமுள்ள மலை ஒன்றின் மீது 700 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.
அக்கால இந்திய கட்டிடக்கலை தொழில் நுட்பத்தின் கிரீடம் என்று சொல்லும் அளவுக்கு இது பல்லாண்டு கால இயற்கை அழிவுகளையும் எதிர்கொண்டு காலத்தில் நிலைத்து நிற்கிறது. இக்கோட்டைக்கு செல்வதென்பது அவ்வளவு சுலபான காரியம் என்று சொல்வதிற்கில்லை.
செங்குத்தான வளைந்து நெளிந்து செல்லும் பாதை வழியே சுமார் ஒரு மைல் தூரமாவது நடக்கவேண்டியுள்ளது. இந்த கோட்டைக்கு ஹிந்து கடவுளர்களின் பெயர்களால் அழைக்கப்படும் ஏழு பிரம்மாண்டமான, உலோக ஈட்டிகள் பொருத்தப்பட்ட வாசல்கள் உள்ளன.
இந்த கோட்டை வளாகத்துக்குள்ளேயே ராணி பத்மினி மற்றும் மஹாராணா கும்பா ஆகியோரின் அரண்மனைகள் அமைந்துள்ளன. இது தவிர பல அழகிய கோயில்களையும் இந்த கோட்டைக்குள் காணலாம். மழைநீர் மற்றும் இயற்கை வடிகால்கள் மூலமாக நீரைப்பெறும் பல நீர்த்தேக்கங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.