சித்தோர்கர் நகரின் பிரதான ஆன்மிகத்தலங்களாக இந்த சன்வாரியாஜி கோயில்கள் கீர்த்தி பெற்றுள்ளன. கிருஷ்ண பஹவானின் அவதாரமான சன்வாரியாஜிக்காக இந்த கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஹிந்து பக்தர்களால், குறிப்பாக வட இந்திய பக்தர்களால், இந்த கோயில்கள் பெரிதும் பூஜிக்கப்படுகின்றன.
இந்த கோயில்களில் இரண்டு தேசிய நெடுஞ்சாலை எண் 76ன் வழியில் அமைந்துள்ளன. மூன்றாவது கோயில் பட்சோடா சௌரஹா எனும் இடத்திலிருந்து 1கி.மீ தொலைவில் நெடுஞ்சாலை எண் 76ல் அமைந்துள்ளது.
இக்கோயில்களின் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. அதாவது, 250 வருடங்களுக்கு முன்னால் போலராம் குர்ஜார் எனும் இடையர் குலச்சிறுவன் பட்சோடா பகுதியில் நான்கு தெய்வச்சிலைகள் புதைக்கப்பட்டுள்ளதை கனவாக கண்டதாக சொல்லப்படுகிறது.
பின்னர் அவ்விடங்களை தோண்டி நான்கு சிலைகள் எடுக்கப்பட்டபோது அவற்றில் ஒன்று சேதாரமடைந்ததால் அது மீண்டும் மண்ணில் புதைக்கப்பட்டது. அப்படி எடுக்கப்பட்ட மூன்று சிலைகளே இந்த மூன்று கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு சன்வாரியாஜி என்ற தெய்வமாக வணங்கப்படுகின்றன. இந்த சிலைகள் கிருஷ்ணபகவானின் குழலூதும் தோற்றத்தில் அழகாக காட்சியளிக்கின்றன.