சோட்டாணிக்கரா பகவதி அம்மன் என்று பக்தியோடு வணங்கப்படும் அம்மனுக்காக உருவாக்கப்பட்டுள்ள சோட்டாணிக்கரா கோயில் கேரளா மாநிலம் முழுதும் பிரசித்தி பெற்ற ஒரு முக்கியமான கோயிலாகும்.
தினந்தோறும் இங்கு வருகை தரும் நூற்றுக்கணக்கான பக்தர்களின் மனக்குறையை இந்த பகவதி அம்மன் தீர்த்து அருளாசி வழங்கி அனுப்பி வைப்பதாக ஐதீகம். ஆன்மீக முக்கியத்துவம் மட்டுமல்லாமல் புராதன கால கேரளிய கட்டிடக்கலை அம்சத்தின் மஹோன்னதத்துக்கான சான்றாகவும் இந்த பழமையான கோயில் வீற்றிருக்கிறது.
பகவதி அம்மனின் மூன்று ரூபங்கள் இந்த கோயிலில் வழிப்படப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க விசேஷமாகும். அதாவது, காலையில் வெள்ளுடை அணிந்த சரஸ்வதி தேவியாகவும், மதியத்தில் சிவப்பு உடை பூண்ட லட்சுமி தேவியாகவும், மாலையில் நீல நிற ஆடை உடுத்திய துர்க்கா தேவியாகவும் இந்த பகவதி அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றார்.
இங்கு நடத்தப்படும் பலவித திருவிழாக்களில் சோட்டாணிக்கரா மகம் தொழல் எனும் (மார்ச் மாதத்தில் நடத்தப்படுவது) திருவிழா முக்கியமானதாகவும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளும் உற்சவமாகவும் அறியப்படுகிறது. மனநோயால் அவதிப்படுவர்களை குணமாக்கும் சக்தி இந்த சோட்டாணிக்கரா அம்மனுக்கு உள்ளதாக பரவலான நம்பிக்கை நிலவுகிறது.