மடிகேரி நகரத்திலிருந்து 7-8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அப்பே நீர்வீழ்ச்சி கூர்க் பகுதியில் அதிகம் விரும்பி ரசிக்கப்படுகிற ஒரு நீர்வீழ்ச்சியாகும். அடர்த்தியான தனியார் காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களின் வழி செல்லும் ஒரு குறுகிய பாதையின் முடிவில் திடீரென்று தோன்றி நம்மை திடுக்கிட வைக்கின்றது இந்த நீர்வீழ்ச்சி. அந்த பகுதியின் அமைதியைக் கிழிக்கும் அளவுக்கு ஹோ’ வென்று இது எழுப்பும் ஓசை நம்மை திகைக்கவோ அல்லது திகிலடையவோ வைக்கின்றது.
மடிகேரியின் முதல் பிரிட்டிஷ் தளபதியின் மகள் நினைவாக ஜெஸ்ஸி ஃபால்ஸ் என்றும் ஒரு காலத்தில் இந்த நீர் வீழ்ச்சி அழைக்கப்பட்டது. அப்பே அல்லது அப்பி என்றால் கொடவா மொழியில் அருவி என்பது பொருளாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த நீர் வீழ்ச்சி பல சிற்றாறுகள் ஒன்று சேர்ந்து உருவாகி உயரமான பாறைகள் மீது வழிந்து சிதறி நீர்ச்சிதறலுடன் படு வேகத்தில் அடியிலுள்ள அமைதியான தடாகத்தில் விழுகிறது.
கண்கொள்ளா காட்சி என்று வர்ணிக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி எழுப்பும் சத்தம் அந்த பகுதியின் அமைதியை ஊடுறுவி ஒலித்டு அதன் கம்பீர இருப்பை உணர்த்துகிறது. இப்படி நீர்வீழ்ச்சியில் மேலிருந்து நீர் சரிந்து விழுவதால் எழும் சிதறலானது பனிமேகம் போன்ற ஒரு சூழலை அவ்விடத்தில் உருவாக்கி அவை மலைகளின் மீது தவழ்வது போன்ற ஒரு தோற்றத்தினை பார்வையாளர்களுக்கு தருகிறது.பொதுவாக மழைக்காலத்தில் இந்த நீர் வீழ்ச்சியின் வேகம் அதிகமாக இருக்கும்.
கோடைக்காலத்தில் நீர் வரத்து குறைவு என்பதால் நீர் வீழ்ச்சியிலும் அதிகம் வேகம் இருக்காது. நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் வசதியாக பார்க்கும் விதத்தில் ஒரு தொங்கு பாலம் ஒன்றும் அதற்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மறுபுறத்தில் அமைந்துள்ள காளி மாதா கோயிலும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.