பைலாகுப்பே என்பது இந்தியாவிலேயே தர்மஷாலாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திபெத்திய குடியேற்ற ஸ்தலமாகும். இது குஷால் நகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. ஆயிரக்கணக்கான திபெத்திய அகதிகள் குடியேறி வாழும் லுக்சும் சாம்துப்லிங் மற்றும் டிக்யி லார்சோயி என்ற இரண்டு பெரிய குடியிருப்புகள் இங்கு காணப்படுகின்றன.
சீன நாடு திபெத்தை ஆக்கிரமிப்பு செய்த காலத்தில் திபெத்திலிருந்து வெளியேறிய இந்த அகதிகள் தற்சமயம் இந்த குடியிருப்புகளில் வாழ்கின்றனர். இந்த ஸ்தலத்தில் விவசாய இடங்கள், திபெத்திய மடலாயங்கள், சுற்றுலா பயணிகளுக்கான திபெத்திய உணவகங்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான கடைகள் என்று அனைத்தும் காணப்படுகின்றன.
இருப்பினும் பைலாகுப்பே’யில் முக்கியமான சிறப்பம்சம் இங்குள்ள தங்கக்கோயில் அல்லது ‘நம்ட்ரோலிங்’ என்று அழைக்கப்படும் திபெத்திய மடாலயமாகும். தென்னிந்தியாவில் முழுக்க முழுக்க திபெத்திய கட்டிடக்கலை அம்சம் மற்றும் அதற்குரிய பாரம்பரியத்துடன் விளங்கும் இந்த மடாலயத்தை முதலில் பார்க்கும் சுற்றுலா பயணிகள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகின்றனர்.
இந்த திபெத்திய மடாலயத்தின் உள்ளே தங்க நிறத்தில் ஜொலிக்கும் பத்மசாம்பவா, புத்தா, அமிதாயுஸ் போன்ற சிலைகள் நுட்பமான அலங்கார வேலைப்பாடுகளுடன் பார்வையாளர்களை பிரமிப்பில் சொக்க வைக்கின்றன. பூஜை முரசு, பூஜை சக்கரம் மற்றும் கதவுகள் யாவுமே நுட்பமான நேர்த்தியான கைவினைக்கலை வேலைப்பாடுகளை கொண்டுள்ளன.
கோயிலின் சுவர்களின் திபெத்திய தங்கா ஓவியப்பாணியில் வரையப்பட்டுள்ள புத்தரின் வாழ்க்கைக்குறிப்புகள் மற்றும் வஜ்ராயண பௌத்த மரபு சார்ந்த கடவுள் ஓவியங்கள் காணப்படுகின்றன. பௌத்த குருகுல கல்விக்கூடமான ‘ஸேரா’, டஷிலுன்போ மடாலயம், ஸேரா மேய் மற்றும் ஸேரா ஜே போன்ற சிறிய மடாலயங்கள் ஆகியவையும் இங்கு திபெத்திய மரபை பேணுவதற்காக அமைந்துள்ளன.