தண்டேவாடா எனும் இந்த சிறு நகரம் சத்தீஸ்கர் மாநிலத்தின் தெற்கு பஸ்தர் மண்டலத்தில் அமைந்திருக்கிறது. தன் பெயரிலேயே அழைக்கப்படும் தண்டேவாடா மாவட்டத்தின் தலைநகரமாகவும் இது இயங்குகிறது. ஆதிகாலத்தில் இப்பகுதியை ஆண்ட ராஜ வம்சத்தினரின் தலைநகராகவும் இது திகழ்ந்திருக்கிறது.
தண்டேவாடா மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்
அற்புதமான இயற்கை எழிற்காட்சிகள், வரிசையாய் மடிந்து கிடக்கும் மலைத்தொடர்கள் போன்ற எழில் அம்சங்களுடன் இந்த தண்டேவாடா மாவட்டம் வீற்றிருக்கிறது. சிறப்பான வரலாற்று பின்னணியை கொண்டுள்ள இந்த பூமியில் பல பழமையான கோயில்களையும் பார்க்க முடிகிறது.
தண்டேஷ்வரி எனும் உள்ளூர் குல தெய்வத்தின் பெயராலேயே இந்நகரம் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த தண்டேஷ்வரி கோயில் தண்டேவாடாவின் அடையாளமாக வீற்றிருக்கிறது.
இது தவிர பைலாடிலா, பர்சூர், பிஜாப்பூர், கம்மவாடா நினைவுத்தூண்கள், போத்காட் சாத் தர் போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.
தண்டேவாடாவின் கலாச்சாரம்!
தண்டேவாடா மக்கள் பெரும்பாலும் முரியா மற்றும் தண்டமி மரியா எனும் பழங்குடி இனப்பிரிவுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த மாவட்டத்தை சுற்றி ஆந்திரம் மற்றும் ஒரிஸா மாநிலப்பகுதிகள் சூழ்ந்திருந்தாலும் தண்டேவாடா தனது பூர்வகுடி கலாச்சாரத்தை இழக்காமல் தனித்தன்மையோடு காட்சியளிக்கிறது.
இம்மக்கள் பெரும்பாலும் அசைவ உணவுப்பிரியர்களாக உள்ளனர். கற்கள் மற்றும் இயற்கைப்பொருட்களால் உருவாக்கப்பட்ட பழங்குடி ஆபரணங்களை மட்டுமே இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் விரும்பி அணிகின்றனர். ஹோலி மற்றும் துஷேரா போன்ற எல்லா முக்கிய ஹிந்து பண்டிகைகளையும் இப்பகுதி மக்கள் விரும்பி கொண்டாடுகின்றனர்.
எப்படி செல்லலாம் தண்டேவாடாவுக்கு?
விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதற்கான எல்லா போக்குவரத்து வசதிகளை இந்த மாவட்டம் வாய்க்கப்பெற்றுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ராய்பூரில் உள்ளது.