ஐராவதீஸ்வரர் கோயில் ஆன்மீக பயணிகளின் கூட்டத்தை அதிகமாக ஈர்த்து வருகிறது. ஐராவதம் என்பது இந்திரனின் யானை. துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாம். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
யம தர்ம ராஜா, இவ்விடத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாகவும் கூறுவர். இக்கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை, ஐராவதீஸ்வரர் என்ற பெயரில் பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.
இக்கோவில், தமிழனின் கோவில் கட்டமைப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஐராவதீஸ்வரர் கோயில் மிகவும் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த திருத்தலம்.
கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள்.
ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதீஸ்வரர் கோயில், நிச்சயமாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திருக்கோவில் ஆகும்.