இந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்தவரான சுபாஷ் சந்திர போஸ் அவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த ஆசாத் ஹிந்த் கிராம் எனும் சுற்றுலா வளாகத்தை டெல்லி சுற்றுலா வளர்ச்சிக்கழகம் உருவாக்கியுள்ளது. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் இந்த ஸ்தலத்தில் தான் நேதாஜி அவர்கள் இந்திய போராட்ட வீரர்கள் முன்னிலையில் வீர உரை நிகழ்த்திச்சென்றுள்ளார்.
டெல்லி-ஹரியானா எல்லைப்பகுதியில், டெல்லியிலிருந்து 2 கி.மீ தொலைவில், 10ம் எண் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஆஸாத் ஹிந்த் கிராம் அமைந்துள்ளது. பாரம்பரிய கைவினை கலையம்சங்களுடன், வட இந்திய கட்டிடக்கலை பாணியில் இந்த வளாகம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
கொல்கத்தாவை சேர்ந்த சில ஓவியர்களால் நேதாஜியின் வெவ்வேறு முகபாவங்கள் இங்கு சுவரோவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. சுதந்திரப்போராட்ட நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ள கேன்வாஸ் ஓவியங்களையும் இங்கு பயணிகள் காணலாம்.
மொசைக் வடிவமைப்புடன் காட்சியளிக்கும் குமிழ் கோபுரம் மற்றும் அருங்காட்சியகம் போன்றவை இந்த வளாகத்தின் முக்கிய அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. தில்லி சலோ எனப்படும் அருங்காட்சியகத்தில் சுதந்திரப்போராட்ட காலத்தை சேர்ந்த பல பத்திரிகை செய்திகளின் கத்தரிப்புகள் மற்றும் இந்திய தேசிய ராணுவப்படையில் இடம் பெற்றிருந்த முக்கிய தளபதிகள் குறித்த தகவல்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவை மட்டுமல்லாமல் ஒரு திறந்தவெளி அரங்கு, உணவு அங்காடிகள், பொதுத்தொலைபேசி கூண்டு, ஞாபகார்த்தபொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் தகவல் மையம் போன்றவை இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.
தேசிய விடுமுறை நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த ஆஸாத் ஹிந்த் கிராம் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.