பஹாய் கோயில் அல்லது தாமரைக்கோயில் என்றழைக்கப்படும் இந்த அற்புதமான வழிபாட்டுத்தலம் 1986ம் ஆண்டு புது டெல்லிப்பகுதியில் திறக்கப்பட்டதிலிருந்தே பயணிகள் தவறாது விஜயம் செய்யும் ஸ்தலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் 40 லட்சம் பார்வையாளர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பஹாபூர் எனும் கிராமப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆன்மீகஸ்தலம் புதுடெல்லியில் முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்தியாவிலுள்ள பஹாய் கோயில்களுக்கெல்லாம் தலைமைக்கோயிலாக இது திகழ்கிறது.
கலையம்சம் நிரம்பிய நிர்மாண வடிவமைப்பிற்காக தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் இந்த தாமரைக்கோயில் அடிக்கடி இடம்பெற்றுள்ளது. பலவித விருதுகளையும் இது குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லா பஹாய் கோயில்களையும் போலவே இந்த கோயிலும் எல்லா மதப்பிரிவுகளை சேர்ந்தவர்களும் பிரவேசம் செய்யலாம் என்ற விசேஷ தத்துவத்தை பின்பற்றுகிறது.
இந்த அடிப்படை தத்துவம்தான் பஹாய் புனித நூல்களின் அடிப்படை சாரம் என்பதும் ஒரு வியப்பூட்டும் உண்மையாகும். இருப்பினும் எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் கூடி தத்தமது வேத மறைத்தத்துவங்களை உச்சரித்து பிரார்த்தனையில் ஈடுபடத்தடையில்லை என்றாலும் பிரச்சாரத்திலோ அல்லது சடங்கு முறைகளிலோ ஈடுபடக்கூடாது என்பது இந்த வழிபாட்டுத்தலத்தில் பின்பற்ற வேண்டிய நெறிமுறையாகும்.
இந்த புனிதத்தலத்தின் கலாபூர்வ வடிவமைப்பு உருவான கதை:
பஹாய் புனித நூல்களின்படி, பஹாய் மதத்தை நிறுவிய யோகி பஹாவுல்லா’வின் மகனான அப்துல் பஹா என்பவர் ஒரு வழிபாட்டு திருத்தலமானது ஒன்பது முகங்களை கொண்ட வட்ட வடிவ அமைப்பை கொண்டதாக அமைய வேண்டுமென்றும், இதில் எந்தவித சிலைகளோ, சித்திரங்களோ இடம்பெறக்கூடாது என்றும், பீடங்கள் பூஜை மாடங்கள் போன்ற அமைப்புகள் எதுவும் உட்கூடத்தில் இடம்பெறக்கூடாது என்றும் வரையறுத்ததாக சொல்லப்படுகிறது. அந்த வரையறையின்படியே இந்த பஹாய் பிரார்த்தனைக்கோயில் அழகுற நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பிரார்த்தனைக்கோயிலின் தனித்தன்மையான வடிவத்தில் தாமரை இதழ்கள் போன்ற 27 தனித்தனியான சலவைக்கல் நிர்மாணங்கள் நுணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முகத்திலும் மூன்று இதழ்கள் வருமாறும் ஒன்பது முகங்கள் இந்த கட்டமைப்பில் காணப்படுகின்றன. இந்த பிரார்த்தனைக்கோயிலின் உள் கூடத்தினுள் நுழையும்படியாக ஒன்பது வாசல்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதன் மையக்கூடத்தில் ஒரே சமயத்தில் 2500 பேர் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடலாம். இந்த மையக்கூடம் 40 மீ உயரம் கொண்டதாகவும் சுற்றிலும் ஒன்பது தடாகங்கள் மற்றும் அழகிய நந்தவனங்களால் சூழப்பட்டும் காட்சியளிக்கிறது. ஒட்டுமொத்த கோயில் வளாகமும் பிரம்மாண்டமான 26 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான கட்டமைப்புடன் ஒளிரும் இந்த பிராத்தனை கோயிலின் தனித்தன்மையானது மிகப்பிரசித்தமாக நாடுகடந்தும் அறியப்படுகிறது. பலவித விருதுகளை பெற்றுள்ளதுடன் இது பல புத்தகங்கள், இந்திய தபால் தலைகள், இசை வடிவங்கள், செய்திப்பத்திரிகைகள், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் இடம்பெற்றுள்ளது.
2001ம் ஆண்டில் கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் விஜயம் செய்யும் ஆன்மீக ஸ்தலமாகவும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.