தெற்கு டெல்லியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆத்யா காத்யாயணி ஷக்தி பீட மந்திர் அல்லது சத்தர்புர் மந்திர் என அழைக்கப்படும் இந்த கோயில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கோயில் வளாகமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இது துர்க்கா தேவியின் ஆறாவது அவதாரமான காத்யாயணி எனப்படும் தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள கோயிலாகும். மற்ற ஹிந்துக் கோயில்களைப்போல் அல்லாது, மத இன பேதங்களுக்கப்பாற்பட்டு அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த பக்தர்களும் இந்த கோயிலுக்கு விஜயம் செய்வது இதன் சிறப்பம்சமாகும்.
துர்க்கை அம்மனின் தீவிர பக்தரான ஸ்வாமி நாக்பால் மஹராஜ் என்பவரால் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. வெள்ளைப்பளிங்கு கற்களால் எழுப்பப்பட்டுள்ள இந்த கோயிலை சுற்றி அழகிய தோட்டங்கள் அமைந்துள்ளன.
இந்த கோயிலிலுள்ள சிற்பவடிப்புகள் தென்னிந்திய மரபுப்படி உருவாக்கப்பட்டிருக்கின்றன. முடிவே இல்லாது நீண்டு செல்வதுபோல் பிரமாண்டமாக அமைந்திருக்கும் இந்த கோயில் வளாகம் பார்வையாளர்களை பிரமிப்பூட்டுகிறது. கோயிலை விட்டு திரும்புவதற்கு மனம் வராத அளவுக்கு இந்த ஆலயச்சூழல் யாத்ரீகர்களை வசப்படுத்துகிறது.
மிகப்பிரம்மாண்டமான 70 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கோயில் வளாகத்தில் 20 சிறிய மற்றும் பெரிய கோயில்கள் மூன்று தொகுப்புகளாக நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.
கோயில் நிறுவனரான ஸ்வாமி நாக்பால் மஹராஜ் அவர்களின் சமாதியை கொண்ட சன்னதி ஒன்றும் இந்த வளாகத்திலேயே உள்ள ஷிவ்-கௌரி நாகேஷ்வர் மந்திர் தொகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கோயில் வளாக வாசலில் ஒரு பெரிய மரம் ஒன்று வீற்றிருக்கிறது. இந்த மரத்தின் கிளைகளில் பக்தர்கள் புனிதக்கயிறுகள் மற்றும் வளையல்களை கட்டி தொங்கவிட்டிருக்கின்றனர். இப்படி செய்தால் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதாக பக்தர்கள் மத்தியில் ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.
சத்தர்புர் மந்திர் வளாகத்தில் இரண்டு முக்கியமான கோயில்கள் இடம் பெற்றுள்ளன. துர்க்கையம்மனுக்காக எழுப்பப்பட்டுள்ள மஹா கௌரி கோயில் இவற்றில் ஒன்று. இது தினமும் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது.
மற்றொரு கோயில் காத்யாயணிக்காக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இது ஒவ்வொரு மாதத்தின் அஷ்டமி நாளிலும், நவராத்திரி திருநாளிலும் மட்டுமே திறக்கப்படுகிறது.
காத்யாயணி தேவியின் பிரம்மாண்ட தங்கச்சிலை உலகெங்கிலுமிருந்து பக்தர்களையும், யாத்ரீகர்களையும் இந்த கோயிலுக்கு ஈர்க்கிறது. இந்த சிலை பளபளக்கும் அலங்கார ஆடைகளாலும், மினுமினுக்கும் ஆபரணங்களாலும், கனமான மாலைகளாலும் நுணுக்கமாக அலங்கரிக்கப்பட்டு காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.
சிவபெருமான், விநாயகர், ஆஞ்சநேயர், ராதா-கிருஷ்ணர் மற்றும் ராமர் போன்ற தெய்வங்களுக்கான சன்னதிகளும் இந்த சத்தர்பூர் மந்திர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை யாவுமே வட இந்திய மற்றும் தென்னிந்திய கோயில்கலை மரபுகளை கலந்து வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.