கொரோனஷன் பார்க் என்று அழைக்கப்படும் இந்த பூங்கா புது டெல்லியில் நிரங்காரி சரோவர் தீர்த்தத்துக்கு அருகில் புராரி சாலையில் அமைந்துள்ளது. கரோனேஷன் மெமோரியல் என்றும் அழைக்கப்படும் இந்த பூங்கா ஒற்றை மணற்பாறையால் நினைவுத் தூண் ஒன்றை கொண்டுள்ளது.
நவீன இந்தியாவின் தலைநகராக டெல்லி மாறிய வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் இந்த கரோனேஷன் பார்க் பூங்காவும் ஒரு அங்கமாக விளங்கியிருக்கிறது என்பது ஒரு சுவாரசியமான தகவலாகும்.
இந்த பூங்கா ஸ்தலத்தில்தான் ஆங்கிலேயர்கள் 1877ம் ஆண்டு ஒரு அரசவைக் கூட்டத்தை நடத்தி விக்டோரியா மஹாராணியை இந்தியாவின் அரசியாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
1903ம் ஆண்டு ஏழாம் எட்வர்டு மன்னர் அரியணை ஏறியபோது இதே ஸ்தலத்தில் மீண்டும் ஒரு அரசவைக்கூட்டம் நடத்தப்பட்டது. இருப்பினும் 1911ம் ஆண்டு ஜார்ஜ் மன்னர் ஆட்சிக்கு வந்து இந்தியாவின் தலைநகரை கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றம் செய்தபோது இந்த ஸ்தலத்தில் மிகப்பிரமாண்டமான அரசவை கொண்டாட்ட விழா நடத்தப்பட்டு புதிய தலைநகரமான டெல்லிக்காக ஒரு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
இந்த பூங்காவில் காணப்படும் பிரம்மாண்ட பாறைத்தூண் இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் இந்த பிரம்மாண்ட பாறைத்தூணுக்கு எதிரில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலையும் இதர ஆங்கிலேய ஆட்சியாளர்கள், கவர்னர்கள் மற்றும் சில அதிகாரிகளின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பூங்கா வளாகத்தையும் அதனுள் காணப்படும் சிலைகளையும் வரலாற்றுச்சின்னங்களாக பராமரித்து பாதுகாக்க டெல்லி மாநகர வளர்ச்சி குழுமம் முடிவெடுத்துள்ளது. புராரி ரோட் அல்லது பாய் பரமானந்த் மார்க் என்று அழைக்கப்படும் பகுதியில் இந்த கரோனேஷன் பார்க் அமைந்துள்ளது.