பொதுமக்களுக்கான நவீன போக்குவரத்து வசதியை அளிக்கும் நோக்கத்துடன் மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து இந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டத்தினை டெல்லி மாநகரில் நிறைவேற்றியுள்ளன.
சந்தடி நிறைந்த டெல்லி நகரச்சாலைகளிலிருந்து விலகி டெல்லி பொதுமக்கள் வசதியாகவும் சுலபமாகவும் பயணிக்கும் வகையில் இந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை செயல்படுகிறது.
1998ம் ஆண்டில் மெட்ரோ பணிகள் துவங்கப்பட்டு 2002ம் ஆண்டில் ரெட் லைன் என்ற ஒரே ரயில் பாதையுடன் மெட்ரோ ரயில் சேவை இயங்க ஆரம்பித்தது. அதன் பின்னர் மஞ்சள் பாதை, நீலப்பாதை, பச்சைப்பாதை மற்றும் ஊதாப்பாதை என்ற பெயர்களில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதைகளில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
சாதாரண பயணிகளுக்குகூட எளிதில் புரியும் விதத்தில் இந்த மெட்ரோ ரயில் சேவை நடைமுறைகள் உள்ளன. ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் முன் கூட்டியே பணம் செலுத்தக்கூடிய விதத்தில் வழங்கப்படும் பயணச்சீட்டுகள் விருப்பம்போல் பயணம் செய்ய வசதியாக உள்ளன. மெட்ரோ நிலையங்களில் ரயில்களின் வருகையும் புறப்பாடும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அறிவிக்கப்படுகின்றன.
சர்வதேச தரத்துடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களைப்பயன்படுத்தி இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் முழுக்கவும் குளிரூட்டப்பட்டிருப்பதால் பயணம் சொகுசாகவும் சுகாதாரமாகவும் உள்ளது.
தானியங்கி கட்டண வசூல் முறை பயன்படுத்தப்படுவதால் பயண தாமதங்கள் தவிர்க்கப்பட்டு பயணிகள் நடமாட்டமும் எளிதாக உள்ளது. மெட்ரோ நிலையங்களில் தானியங்கி கதவுகளும், மின் நகர்த்திகளும் (எஸ்கலேட்டர்) அமைக்கப்பட்டு பயணிகள் நிலையத்திற்குள் நுழையவும் வெளிவரவும் வசதியாக உள்ளன.
இந்தியாவிலேயே முதல் முறையாக நவீன முறையில் அமைக்கப்பட்டதாகவும், மற்ற மாநகரங்களுக்கு முன்னுதாரணமாகவும் இந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து டெல்லியில் இயக்கப்படுகிறது. டெல்லிக்கு வருகை தரும் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அனுபவத்தையும் தவறவிடக்கூடாது.