ஃபெரோஸ் ஷா கொட்லா என்று அழைக்கப்படும் இந்த கோட்டையானது 1360ம் ஆண்டு ஃபெரோஸ் ஷா துக்ளக் மன்னர் ஃபெரோஸாபாத் நகரை உருவாக்கியபோது கட்டப்பட்டிருக்கிறது.
டெல்லியின் ஐந்தாவது நகரமாக உருவாக்கப்பட்ட ஃபெரோஸாபாத் நகரத்தின் வரலாற்று மிச்சங்களாக இந்த ஃபெரோஸ் ஷா கோட்லா எனப்படும் கோட்டை, ஜம்மா மஸ்ஜித் மற்றும் அஷோகா பில்லர் ஆகியவை வீற்றிருக்கின்றன.
யமுனா நதியின் கரையிலேயே இந்த ஃபெரோஸ் ஷா கோட்லா நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்தலத்திலுள்ள அசோகத்தூணும் பிரசித்தமான வரலாற்றுச்சின்னமாக திகழ்கிறது.
மூன்று அடுக்குகளைக்கொண்டதாக கற்துகள் மேடையின் மீது இந்த தூண் எழுப்பப்பட்டுள்ளது. அசோக சக்ரவர்த்தியால் மீரட் நகரில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த 13மீ உயரம் கொண்ட இந்த தூணை ஃபெரோஸ் ஷா மன்னர் எடுத்து வந்து டெல்லியில் மறு ஸ்தாபிதம் செய்வித்ததாக வரலாறு கூறுகிறது. இந்த அசோகத்தூண்களின் மூலமாக பௌத்த மார்க்க கருத்துக்களை பரப்புவதே அசோகரின் நோக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மணற்பாறையால் இந்த அசோகத்துண் உருவாக்கப்பட்டிருந்தாலும் வெயிலில் ஒரு உலோக அமைப்பு போன்றே ஜொலிப்பது ஒரு ஆச்சரியமூட்டும் அதிசயமாகும். எனவே மதிய நேரத்தில் ஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்தலத்துக்கு விஜயம் செய்வது இந்த காட்சியை ரசிக்க பொருத்தமாக இருக்கும். ஜம்மா மஸ்ஜித் மற்றும் ராஜ் காட் ஆகிய முக்கிய சுற்றுலா அம்சங்களும் இந்த ஸ்தலத்துக்கு அருகிலேயே உள்ளன.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் டெல்லி மாநகரத்தில் பெரிய கலையரங்குகள் என்று ஏதும் இருந்திருக்கவில்லை. எனவே பெரும்பாலான இசை மற்றும் கலை அரங்கேற்ற நிகழ்ச்சிகள் இந்த ஃபெரோஸ் ஷா கோட்லா அல்லது குதுப் காம்ப்ளக்ஸ் எனப்படும் வளாகத்தில் நடத்தப்பட்டு வந்தன என்பதும் குறிப்பிடத்தக்க தகவலாகும்.
ஃபெரோஸ் ஷா கோட்லாவுக்கு அருகிலேயே பிரகதி மைதன், ராஜ்காட் மற்றும் சாந்தினி சௌக் போன்ற முக்கியமான சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன.