முகலாய பேரரசர் ஹுமாயூன் அவர்களின் கல்லறையான இது புது டெல்லியில் புராண குயிலா அல்லது பழைய கோட்டை அழைக்கப்படும் கோட்டைக்கு அருகில் உள்ளது.
இந்த கல்லறை மாளிகையின் கட்டுமானம் ஹுமாயுன் மன்னரின் நினைவாக அவரது ராணியான ஹமிதா பானு பேகம் என்பவரின் ஆணைப்படி 1562ம் ஆண்டில் துவக்கப்பட்டிருக்கிறது.
மிராக் மிர்ஸா கியாத் எனும் பாரசீக கட்டிடக்கலைஞர் இதனை வடிவமைத்துள்ளார். ஹுமாயூன் இறந்து ஒன்பது வருடங்கள் கழித்து இந்த கல்லறை நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ்பெற்றுள்ள இந்த ஹுமாயூன் கல்லறைச்சின்னம் லோதி சாலைக்கும், மதுரா சாலைக்கும் நடுவே கிழக்கு நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது.
1993ம் ஆண்டில் யுனெஸ்கோ பண்பாட்டு ஸ்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கல்லறை வளாகம் இந்திய முகாலயர்காலத்திய கட்டிடக்கலை மேன்மைக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.
சுற்றிலும் பாதுகாப்புச்சுவரால் சூழப்பட்டுள்ள இந்த அழகிய தோட்டக்கல்லறை வளாகத்தில் அழகிய பூங்காக்கள், நீர்க்கால்வாய்கள், நீரூற்றுகள், நடைமேடைகள் போன்றவை காணப்படுகின்றன. ஹுமாயுனுக்கு அடுத்த வந்த சில முகலாய மன்னர்களின் சமாதிகள் இந்த வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.
ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் காணப்படும் விசேஷமான அம்சங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள்:
சார் பாக் கார்டன்: பாரசீக பாணியில் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த தோட்டப்பூங்கா தென்கிழக்காசியாவிலேயே முதன்முதலாக இதுபோன்று உருவாக்கப்பட்ட அழகுப் பூங்காவாக புகழ் பெற்றுள்ளது.
பார்பெர்’ஸ் டூம்: ஹுமாயூன் கல்லறை வளாகத்துக்குள்ளேயே நய்-கா-கும்பத் எனும் கல்லறையும் அமைந்துள்ளது. இது ராஜகுடும்ப நாவிதரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனினும் இதில் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இவை தவிர பூ ஹலிமா கல்லறை மற்றும் தோட்டம், இஸாகான் கல்லறை மற்றும் மசூதி, நிலா கும்பத், அஃப்சர்வாலா டூம் மற்றும் மசூதி, சில்லா நிஜாமுதீன் ஔலியா மற்றும் அரப் சராய் போன்ற அம்சங்களும் ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் பார்க்க வேண்டிய அம்சங்களாக காணப்படுகின்றன.