1968ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியா இண்டர்நேஷனல் சென்டர் டெல்லியிலுள்ள அரசு சாரா கலாச்சார மையமாக பிரசித்தமாக இயங்கி வருகிறது. இது எழுத்தாளர்கள், அறிவியல் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், அறிவு ஜீவிகள், கலைஞர்கள் மற்றும் வெளியுறவு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் போன்றோர் சர்வதேச நல்லுறவுக்காக ஒன்று கூடி ஆலோசிக்கும் இடமாக திகழ்ந்து வருகிறது.
சர்வதேச அளவில் பல்வேறு சமூக மக்களிடையே புரிந்துணர்வையும் நட்பையும் உருவாக்கும் நோக்கத்துடன் இந்த ஸ்தாபனம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோக்கத்தை செயல்படுத்தும் விதமாக பல்வேறு கலைந்துரையாடல்கள், சிறப்புரைகள், கலை நிகழ்ச்சிகள், சினிமாத்திரையிடல், இசை நிகழ்ச்சிகள், நிகழ்த்துகலைகள், கண்காட்சிகள் போன்றவை இந்த சர்வதேச நல்லுறவு மையத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் இந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் பார்வையாளர்களாக பங்கேற்கவும் அனுமதி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமல்லாமல், இங்கு வசதியான தங்குமிடங்களையும், உபசரிப்பையும் கலைஞர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு இந்த மையம் வழங்குவதால் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கலாச்சார கேந்திரமாக இது புகழ்பெற்றுள்ளது.
அழகிய மரங்கள் மற்றும் நீரூற்றுகள் நிறைந்த தோட்டத்துடன், வரவேற்புக்கூடம் மற்றும் தேநீர் கூடம் ஆகியவையும் அமைக்கப்பட்ட இனிமையான சூழலுடன் இந்த இந்தியா இண்டர்நேஷனல் சென்டர் வளாகம் காட்சியளிக்கிறது.
எனவே டெல்லிக்கு விஜயம் செய்யும்போது நீங்கள் தவறாமல் இந்தியா இண்டர்நேஷனல் சென்டர் மையத்துக்கும் விஜயம் செய்து இங்கு நடைபெறும் நிகழ்வுகளில் பார்வையாளர்களாக கலந்துகொள்ளலாம், அல்லது தேநீர் பருகியபடியே இந்த வளாகத்தின் ரம்மியமான சூழலை ரசித்து மகிழலாம்.