இந்தியாவிலுள்ள மசூதிகளிலேயே மிகப்பெரியதானதும் பழமையானதுமான இந்த ஜம்மா மஸ்ஜித் எனப்படும் மசூதி அல்லது பள்ளிவாசல் டெல்லி மாநகரத்தின் அடையாளங்களில் ஒன்றாக புகழ் பெற்று விளங்குகிறது.
இது முகலாயப்பேரரசர் ஷாஹஹானின் ஆட்சியில் கடைசியாக உருவாக்கப்பட்ட ஆன்மீக கலைச்சின்னமாகும். 1650 ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த மசூதியின் கட்டுமானம் 1656ம் ஆண்டில் முடிவடைந்திருக்கிறது. டெல்லியில் சௌரி பஜார் சாலையில் இந்த கலையம்சம் நிரம்பிய பிரம்மாண்ட மசூதி கம்பீரமாக வீற்றிருக்கிறது.
ஆரம்பகாலத்தில் இந்த மசூதியானது ‘மஸ்ஜிதி-இ-ஜஹான்-நும்மா’ என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த பெயருக்கு ‘உலகை பிரதிபலிக்கும் மசூதி’ என்பது பொருளாகும்.
வெள்ளிக்கிழமைகளின் மதியத்தில் நடைபெறும் விசேஷ தொழுகையை குறிக்கும் ‘ஜம்மா’ என்ற சொல்லை அடிப்படையாக கொண்டு ‘ஜம்மா மஸ்ஜித்’ என்று பின்னாளில் இந்த மசூதியின் பெயர் மாறிவிட்டது.
இந்த பிரம்மாண்டமான மசூதியில் ஒரே சமயத்தில் 25000 பேர் தொழுகையில் ஈடுபடக்கூடிய அளவுக்கு இடவசதி உள்ளது. மூன்று கம்பீரமான நுழைவாயில்களையும், 40 மீட்டர் உயரம் கொண்ட நான்கு மினாரெட்டுகளையும் (தூண் கோபுரங்கள்) இது கொண்டுள்ளது.
சிவப்பு மணற்பாறைக்கற்கள் மற்றும் வெண்ணிற கிரானைட் கற்களை பயன்படுத்தி இந்த மினாரெட்டுகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. மசூதியின் உள்ளே ஹிந்து மற்றும் ஜைன பாணி கலையம்சங்களை கலந்து வடிவமைக்கப்பட்டுள்ள 260 அலங்காரத்தூண்கள் காணப்படுகின்றன.
மசூதியின் தரைப்பகுதி கறுப்பு மற்றும் வெண்ணிற சலவைக்கற்கள் மாறி மாறி வருமாறு பதிக்கப்பட்டு தொழுகைப்பாய் தரையில் விரிக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை அளிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த மசூதியின் கட்டுமானமும் 5 அடி உயர தரைப்பீட அமைப்பின்மீது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இப்படி பிரம்மாண்டத்தின் உதாரணமாக காட்சியளிக்கும் இந்த ஜாமா மஸ்ஜித் இந்தியாவிலேயே மிகப்பெரிய மசூதி மற்றும் பள்ளி வாசலாக பிரசித்தமாக அறியப்படுகிறது.
மசூதியின் உள்ளே சில பழமையான புனிதப்பொருட்களும் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றின் மான் தோலில் எழுதப்பட்ட திருக்குரான் பிரதி முக்கியமானதாக சொல்லப்படுகிறது.
இது மசூதியின் வடக்கு நுழைவாயிலுக்கருகே வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரசித்தமான செங்கோட்டைக்கு எதிரிலேயே அமைந்துள்ள இந்த மசூதி ஸ்தலத்துக்கு பயணிகள் எளிதில் சென்றடையலாம்.