புகழ்பெற்ற கல்காஜி ஆலயம் இந்தியாவில் அதிக பக்தர்கள் விஜயம் செய்யும் புராதனக்கோயிலாக அறியப்படுகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நேரு பிளேஸ் எனும் இடத்திற்கு அருகில் கால்காஜி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் ஸ்தலத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. துர்க்கா மாதாவின் அவதாரமான காளி தேவிக்காக இந்த கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
மனோகம்ன சித்த பீடம் என்ற பெயரிலும் இந்த கல்காஜி ஆலயம் அழைக்கப்படுகிறது. பக்தர்கள் வேண்டுவதை எல்லாம் நிறைவேற்றும் கோயில் என்பது இதன் பொருளாகும்.
பல்வேறு ராட்சஷ பூதங்களிடமிருந்து தேவர்களை காப்பதற்காக பார்வதிதேவி காளி அவதாரமெடுத்ததாக புராணக்கதைகள் சொல்கின்றன. அந்த காளிகாதேவி தெய்வம் இந்த ஸ்தலத்தை உறைவிடமாக ஏற்று கோயில் கொண்டதாக ஐதீகம்.
சுற்றிலும் பிரமிடு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரங்களுடன் செங்கற்களால் கட்டப்பட்டிருந்த இந்த கோயிலில் தற்போது சலவைக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. கோயிலின் மையப்பகுதி 12 முகங்களுடனும், ஒவ்வொன்றிலும் வாசல் அமைப்புடனும் காணப்படுகிறது. இவற்றில் சலவைக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்துள்ள பிரகார அமைப்பு கருவறையை சூழ்ந்துள்ளதாகவும், அலங்கார வளைவுகளுடன் கூடிய 36 வாசல் திறப்புகளைக் கொண்டதாகவும் காட்சியளிக்கிறது.
தினமும் இந்த கோயிலில் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்ற போதிலும் நவராத்திரி பண்டிகையின்போது இந்த கோயில் விழாக்கோலம் பூண்டு ஜொலிக்கிறது. வருடத்தில் இரண்டு முறை நடத்தப்படும் இந்த பண்டிகை காலங்களில் ஏராளமான பக்தர்களும், யாத்ரீகர்களும் திரளாக இந்த கோயிலுக்கு விஜயம் செய்து காளிதேவியை வணங்குகின்றனர்.
கல்காஜி கோயிலுக்கு அருகிலேயே தாமரைக்கோயிலும், இஸ்க்கான் கிருஷ்ணர் கோயிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.