கிரண் நாடார் மியூசியம் ஆஃப் ஆர்ட் என்று அழைக்கப்படும் இந்த கலைக்காட்சிக்கூடம் அல்லது அருங்காட்சியகம் இந்தியாவிலேயே முதல் முதலாக அமைக்கப்பட்ட தனியார் கலைக்கூடம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
இங்கு இந்திய மற்றும் வெளிநாட்டு படைப்புகள் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஓவிய மற்றும் கலைப்பொருள் சேகரிப்பில் ஆர்வம் மிகுந்த திருமதி கிரண் நாடார் அவர்களால் இந்த தனியார் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கலைப்படைப்புகள் மற்றும் சமூகப் பண்பாட்டுக்கூறுகள் ஆகிய இரண்டுக்குமிடையே உள்ள ஆழமான பிணைப்பை வெளிச்சப்படுத்தும் விதத்தில் இந்த கலைக்கூடம் பல்வேறு நூற்பதிப்புகள், கண்காட்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொது மக்களுக்கான கலை நிகழ்ச்சிகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு பின்னர் 20ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அற்புதமான படைப்புகள் மற்றும் சமகால இளந்தலைமுறையினரின் தனித்தன்மையான ஓவியப்படைப்புகள் போன்ற தனித்தன்மையான் சேகரிப்புகளை இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது.
கலை ஆர்வலர்களும் விமர்சகர்களும் ஒன்று கூடி சமகால படைப்புகளைப்பற்றி விவாதித்து கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் ஒரு கருத்துத்தளமாகவும் இந்த அருங்காட்சியகம் பயன்படுகிறது.
கிரண் நாதர் அவர்கள் இந்த அருங்காட்சியகத்தின் நோக்கம் மற்றும் ஸ்தாபிதம் குறித்து இப்படி சொல்லுகிறார்: “ என்னுடைய சொந்த சேகரிப்புகளை பொதுமக்கள் பார்வைக்கும் வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த தனியார் மியூசியத்தை துவங்கியபோதிலும், சமகால நவீன படைப்புகளை காட்சிப்படுத்தவும் பிரபல்யப்படுத்தவும் ஸ்தாபனரீதியான அமைப்புகள் ஏதும் இல்லை என்பதால் அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் நான் மனதார உணர்ந்தேன்.
அதன் விளைவே இந்த முயற்சி”. சமகால படைப்புகளை முக்கியப்படுத்தும் கிரண் நாடார் அவர்களது அற்புத நோக்கின் முக்கியத்துவத்தை இந்த மியூசியத்துக்கு ஒரு முறை விஜயம் செய்தால் அனைத்து கலாரசிகர்களாலும் புரிந்து கொள்ள முடியும்.
KNMA என்று அழைக்கப்படும் இந்த கலைக்கூடம் 2010ம் ஆண்டு ஜனவரியில் ‘ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன்’ அறக்கட்டளையின் நிதி ஆதரவோடு துவங்கப்பட்டது. மக்களிடையே சமகால கலைப்படைப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளிகள், கல்லூரிகள், பொது மன்றங்கள் போன்ற தளங்களில் கண்காட்சிகளையும், காட்சிவிளக்க உரை நிகழ்ச்சிகளையும் இந்த KNMA கலைக்கூடம் நடத்தி வருகிறது.
கலைப்படைப்புகளிலும், சமகால கலையம்சங்களிலும் ஈடுபாடு கொன்ட ஆர்வலர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் டெல்லி வரும்போது அவசியம் விஜயம் செய்யவேண்டிய ஒரு அம்சம் இந்த KNMA மியூசியமாகும். விருப்பமுள்ளவர்கள் KNMA நடத்தும் கண்காட்சிகள் மற்றும் பயிற்சி முகாம்களிலும் பங்கேற்கலாம்.
இந்திய அளவில் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப துறை நிறுவனமாக வளர்ந்துள்ள ‘ஹெச்.சி.எல்’ நிறுவனத்தை உருவாக்கி நிர்வகிக்கும் பிரபல்யமான தமிழ்நாட்டு தொழிலதிபரான திரு ஷிவ் நாடார் அவர்களின் துணைவியாரே இந்த கிரண் நாடார் என்பது குறிப்பிடவேண்டிய ஒரு உபதகவலாகும்.