லோடி கார்டன் எனப்படும் இந்த பூங்கா டெல்லியிலுள்ள பிரசித்தமான பூங்காக்களில் ஒன்றாகும். 90 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பூங்கா இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.
சிக்கந்தர் லோடி மற்றும் முகமது ஷா ஆகிய மன்னர்களின் கல்லறை நினைவுச்சின்னங்கள் மட்டுமல்லாது படா கும்பத் மற்றும் ஷீஷ் கும்பத் ஆகிய புராதன அமைப்புகளும் இந்த பூங்கா வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ளன.
15ம் நூற்றாண்டில் வட இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட லோதி வம்சத்தினர் மற்றும் சய்யீத் வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் இந்த அற்புதமான கட்டிடக்கலை சின்னங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சப்தர்ஜங் நினைவுச்சின்னம் மற்றும் கான் மார்க்கெட் பகுதிகளுக்கிடையே இந்த லோடி கார்டன் காணப்படுகிறது. ஆரோக்கியம் பேண விரும்பும் டெல்லி வாசிகளிடையே இந்த தோட்டப்பூங்கா மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது. காலை மற்றும் மாலை நடைப்பயிற்சிகளுக்கு ஏற்ற சுத்தமான சூழல் இந்த பூங்காவில் நிலவுவதே இதற்கு காரணம்.
இந்த தோட்டப்பூங்காவில் அமைந்துள்ள வரலாற்றுச்சின்னங்கள் குறித்த தகவல்கள்:
சிகந்தர் லோடி டூம் (கல்லறை நினவுச்சின்னம்): சிகந்தர் லோடியின் கல்லறை நினைவுச்சின்னம் 1517ம் ஆண்டில் அவரது மகனான இப்ராஹிம் லோடியால் கட்டப்பட்டிருக்கிறது.
செவ்வக வடிவ பீடத்தின்மீது எழுப்பப்பட்டுள்ள எளிமையான கட்டமைப்பான இது 1866ம் ஆண்டில் ஆங்கிலேயரால் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாபரால் இப்ராஹிம் லோடி தோற்கடிக்கப்பட்ட வரலாற்றுக்குறிப்பும் ஆங்கிலேயர்களால் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருக்கிறது.
முகமது ஷா கல்லறை நினைவுச்சின்னம்: லோடி தோட்டப்பூங்காவில் இந்த கல்லறை நினைவுச்சின்னமே முதலில் எழுப்பப்பட்டிருக்கிறது. அலாவுதீன் ஆலம் ஷா மன்னரால் 1444ம் ஆண்டில் சய்யீத் வம்சத்தின் கடைசி மன்னரான முகமது ஷாவுக்காக இந்த நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
படா கும்பத்: படா கும்பத் என்றால் பெரிய குமிழ் மாடம் என்பது பொருள். இதன் அருகிலேயே உள்ள மூன்று மாட மசூதிக்கான வாசல் அமைப்பாக இது விளங்கியிருக்கிறது. இந்த கும்பத் அமைப்பும் மசூதியும் 1494ம் ஆண்டில் சிக்கந்தர் லோதியின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது.
ஷீஷ் கும்பத்: ஷீஷ் கும்பத் எனும் பெயருக்கு கண்ணாடி குமிழ் மாடம் என்பது பொருளாகும். வழவழப்பான பீங்கான் ஓடுகள் இந்த அமைப்பின் மாட அமைப்பில் பொருத்தப்பட்டிருப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த அமைப்பில் அடையாளம் தெரியாத ஒரு குடும்பத்தினரின் சமாதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பும் சிக்கந்தர் லோதியின் ஆட்சிக்காலத்தில்தான் கட்டப்பட்டிருக்கிறது.