மெஹ்ரௌலி ஆர்க்கியாலஜிகல் பார்க் என்றழைக்கப்படும் இந்த புராதன ஸ்தலம் தெற்கு டெல்லியில் குதுப் காம்ப்ளக்ஸ் எனும் வரலாற்று ஸ்தலத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்னர் பார்வையாளர்கள் உள்ளே நுழைய முடியாத ஒரு வனப்பகுதியாக இந்த தொல்லியல் ஸ்தலம் அடைந்து கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொன்மையான ஸ்தலத்தில் ஏராளமான நினைவுச்சின்னங்கள் நிரம்பியுள்ளன. உலகில் வேறு எங்குமே இந்த அளவுக்கு ஒரே இடத்தில் நினைவுச்சின்னங்கள் காணப்படவில்லை என்பது இந்த ஸ்தலத்தின் சிறப்பம்சமாகும்.
நினவுச்சின்னங்கள் மட்டுமல்லாமல் 100 ஏக்கர் பரப்புள்ள இந்த புராதன ஸ்தலத்தில் பல மசூதிகள், கல்லறைகள் மற்றும் தோட்டப்பூங்காக்கள் ஆகியனவும் காணப்படுகின்றன.
பால்பன் டூம் எனப்படும் கல்லறை இங்குள்ள நினைவுச்சின்னங்களில் முக்கியமானதாக குறிப்பிடப்படுகிறது. இது 1266 முதல் 1287 வரை டெல்லியை ஆண்ட கியாஸுதீன் பால்பன் எனும் சுல்தானின் கல்லறையாகும். முதல்முதலாக இந்தியாவில் அலங்கார விதான வளைவுடன் அமைக்கப்பட்ட கல்லறை இதுதான் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.
இதே ஸ்தலத்தில் ஜமாலி-கமாலி எனப்படும் ஒரு மசூதியும் காணப்படுகிறது. ஜலால் கான் என்றழைக்கப்பட்ட ஒரு பிரசித்தமான கவிஞர் மற்றும் யோகியின் பெயரால் இந்த மசூதி அழைக்கப்படுகிறது.
இவர் சிக்கந்தர் லோடி மற்றும் ஹுமாயூன் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்துள்ளார். கமாலி எனப்படும் ஒரு கல்லறையும் இங்கு அமைந்துள்ளது. ஆயினும் இந்த கமாலி யார் என்பது குறித்த தகவல்கள் இல்லை.
இவை மட்டுமல்லாமல் இந்த தொல்லியல் பூங்கா ஸ்தலத்தில் மெட்கால்ஃபே குடையமைப்பு, மெட்கால்ஃபே போட் ஹவுஸ், குலி கான் கல்லறை, மெட்கால்ஃபே விருந்தினர் மாளிகை, ராஜோன் கி பாவ்லி, கண்டக் கி பாவ்லி, மௌலானா மஜ்துத்தீன் கல்லறை, கான் ஷாஹித் கல்லறை, ஆதம் கான் கல்லறை போன்ற அமைப்புகளும் நினைவுச்சின்னங்களும் நிரம்பியுள்ளன.
வரலாற்று அம்சங்களை தேடி ரசிக்கும் ஆர்வலராக இருப்பின் நீங்கள் டெல்லியில் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஸ்தலம் இந்த மெஹ்ரௌலி ஆர்க்கியாலஜிகல் பார்க் என்பதில் சந்தேகமே இல்லை.
மேலும், நகரச்சந்தடிகளிலிருந்து முற்றிலும் விலகி, மரங்கள் நிறைந்த இயற்கை சூழலில் வரலாற்றுச்சின்னங்களை ரசித்தபடி அன்புக்குரியவர்களோடு பொழுதுபோக்குவதற்கும் இது உகந்த ஸ்தலமாகும்.